ஆன்மிகம்

வியாபாரம் சிறக்க புதன்கிழமை விரதம்

Published On 2019-06-19 13:47 IST   |   Update On 2019-06-19 13:47:00 IST
புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் புதன் கிழமையில் வருகிற விசாகம் நட்சத்திர தினத்தன்று புதன் விரதம் மேற்கொள்ள தொடங்கி 21 புதன் கிழமைகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் புதன் கிழமையில் வருகிற விசாகம் நட்சத்திர தினத்தன்று புதன் விரதம் மேற்கொள்ள தொடங்கி 21 புதன் கிழமைகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும் உங்கள் வீட்டின் பூஜையறையை கழுவி சுத்தம் செய்து, பீடம் வைத்து, அதன் முன்பாக அரிசி மாவில் தாமரை பூ கோலம் போட வேண்டும். பின்பு அக்கோலத்தின் நடுவில் ஒரு கலசத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும்.

பீடத்தில் புத பகவானின் சிறிய படத்தை வைத்து, அப்படத்திற்கு வாசமுள்ள பூக்களை சூட்டி, புது பச்சை நிற துணியை வைத்து, பச்சை காய்கறிகள் மற்றும் இனிப்புகளை நைவேத்தியம் வைக்க வேண்டும். விரதம் மேற்கொள்பவர்களும் பச்சை நிற உடைகளை அணிந்து கொண்டு நெய் தீபங்கள் ஏற்றி, சந்தன மணம் கொண்ட தூபங்கள் கொளுத்தி புதன் பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் துதித்து புதன் பகவானுக்கு பூஜைகள் செய்ய வேண்டும்.

புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் காலை முதல் மாலை வரை ஏதும் உண்ணாமல், அருந்தாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் புதன் பகவானுக்கு பூஜைகள் செய்ய வேண்டும். மாலையில் புதனுக்கு பூஜை செய்து முடித்து, நைவேத்திய பிரசாதத்தை சாப்பிட்டு விரதம் முடித்ததும் ஒரு பிராமணருக்கு தானம் அளிப்பது மிகுந்த நன்மையை தரும். பச்சை நிற ஆடைகள், பச்சை நிற காய்கறிகள் தானம் அளிப்பது உங்களின் புதன் கிரக தோஷங்கள் நீங்கி புதன் பகவானின் ஆசிகளை உங்களுக்கு தரும்.

நவகிரகங்களில் புதன் பகவான் ஆனவர் மனிதர்களுக்கு சுக போகங்களை அளிக்கும் திருமால் அம்சம் கொண்டவராக இருக்கிறார். எனவே புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் திருமால் அருள் பெற்று மிகுந்த செல்வ சேர்க்கை கிடைக்க பெறுகின்றனர். தொழில், வியாபார திறனுக்கு காரகனாக புதன் இருப்பதால் தொழில், வியாபாரங்கள் வெற்றியடைந்து லாபங்கள் பெருகி, புகழ் உண்டாகும். அறிவாற்றலுக்கும் புதன் அதிபதி என்பதால் இவ்விரதம் மேற்கொள்ளும் மாணவர்கள் கல்வி, கலைகளில் சிறந்து பல நன்மைகளை பெறுவார்கள்.

Similar News