ஆன்மிகம்

‘வட் பூர்ணிமா’ விரதம்

Published On 2019-06-17 03:46 GMT   |   Update On 2019-06-17 03:46 GMT
‘வட் பூர்ணிமா’ விரத கொண்டாட்டத்தையொட்டி கணவரின் ஆயுளுக்காக ஆலமரத்தில்நூலை சுற்றி பெண்கள் வழிபாடு நடத்தினர்.
வட மாநிலங்களில் பெண்களால் ‘வட் பூர்ணிமா’ திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் அதிகரிக்கவும், அவர் நல்ல உடல் நலத்துடன் வாழவும் விரதம் இருந்து இறைவனை வழிபடுகின்றனர்.

சாவித்திரி என்ற பெண் உயிர் இழந்த தன் கணவன் சத்யவானை தனது பதிபக்தியால் எமனிடம் இருந்து காப்பாற்றினாள் என புராணம் கூறுகிறது. அதை நினைவுப்படுத்தும் வகையில் வட் பூர்ணிமா திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா மராட்டியத்தில் ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

நேற்று மராட்டியத்தில் ‘வட் பூர்ணிமா’ எனப்படும் திருவிழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் அதிகரிக்க நேற்று உணவு ஏதும் உண்ணாமல் நோன்பு இருந்தனர். கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தனர்.

பின்னர் தங்கள் கணவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி அவர்கள் குழுவாக ஆலமரத்தில் நூலை சுற்றினர். மேலும் ஒருவருக்கொருவர் குங்கும திலகமிட்டு கொண்டனர்.

மும்பையில் தாராவி, காட்கோபர், தாதர், அந்தேரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ‘வட் பூர்ணிமா’ திருவிழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதுபோன்று தானே, நவிமும்பை, வாஷி பகுதிகளிலும் ‘வட் பூர்ணிமா’ திருவிழாவை திருமணமான பெண்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். 
Tags:    

Similar News