ஆன்மிகம்

விரதங்கள் இறைவனுக்காக மட்டுமல்ல... ஆரோக்கியத்திற்காகவும்..

Published On 2019-04-27 13:29 IST   |   Update On 2019-04-27 13:29:00 IST
விரதங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பெற்றுத்தருகிறது என்பதை முன்னோர்கள் அன்றே கண்டறிந்து நம்மை ஆன்மிகப் பாதையில் இயக்க வைத்திருக்கிறார்கள்.
இறைவனை அனுதினமும் வழிபடுவது நல்லது. ஆனால் முக்கிய நாட்களில் மட்டும் உண்ணாமல் உபவாசம் இருந்து மனம் முழுக்க இறைவனைத் தியானித்து வழிபட வேண்டும். வாரந்தோறும் ஆலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும் என்பதை காலங்காலமாக பழமை மாறாமல் கடைப்பிடித்து வருகிறோம். இன்றைய நிலையில் உண்ணாநோன்பு உடலின் ஆரோக்கியத்தை உயர்த்தவே செய்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்...

ஆன்மிக ரீதியாக:

விரத தினத்தன்று அதிகாலையில் நீராடி முழு நாள் எதுவும் உண்ணாமல் இருக்க வேண்டும். இயலாதவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் பால், பழம் எடுத்துக்கொள்ளலாம். இயன்றவரை திட ஆகாரங்களை விட திரவ ஆகாரங்களே சிறந்தது. நாள்முழுவதும் உபவாசம் இருந்து இரவு முழுவதும் கண் விழிக்கும் விரதங்கள் வருடங்களுக்கு சில நாள்களிலும், ஒரு வேளை உணவு, மாலை நேர உணவு என்று மாதங்களில் சில விரதநாட்களிலும் கடைப் பிடித்து வருகிறோம்.

விரத தினத்தில் வீட்டை சுத்தப்படுத்தி வாசலில் மாவிலை, வேப்பிலைத் தோரணங்கள் கட்டி பூஜையறையில் விளக்கேற்ற வேண்டும். விரதத்துக்குரிய கடவுளின் புராணக்கதைகளையும், ஸ்லோகங்களையும் அன்றைய தினம் முழுக்க படிக்க வேண்டும். கோபம், பரபரப்பு, மன அழுத்தம் ஆகிய பிரச்னைக ளுக்கு இடமளிக்காமல் மனம் முழுக்க இறைவனை நிரப்பி அவனது திருநாமங் களை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.

அருகில் உள்ள ஆலயங்களில் நடக்கும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு ஆண்டவனைத் தியானிப்பது வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும். உற்சவரோடு கோயில் பிரகாரத்தை வலம் வருவது மனத்தில் ஆன்மிக சிந்த னையை மேலோக்கி மனதில் அமைதியை உண்டாக்கும்.

விஞ்ஞான ரீதியாக:

மனதில் அமைதியின்மையும், மன அழுத்தமும் காரமிக்க உணவும் சேர்ந்து உடல் உறுப்புகளைப் பாதிக்கிறது. செரிமான பிரச்னைகளால் வரும் எண்ணற்ற ஆரோக்ய குறைபாடுகளைக் களைய ஒரு நாள் திரவ உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது உடல் ஆரோக்யம் மேம்படுகிறது. இறைவனின் திருநாமத்தை உச்சரித்துக்கொண்டே இருப்பதால் மனதில் இருக்கும் பிரச்னைகள் மறைந்து மனதை ஒருமுகமாக கவனம் செலுத்த முடிகிறது. ஆலயங்களுக்குச் சென்று அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொள்வதன் மூலம் மனதில் இருக்கும் எதிர்மறை சக்திகள் மறைந்து நேர்மறை சக்திகள் பெருகுகிறது. அன்றாட உடற்பயிற்சியில் எளிய நடைபயிற்சியை கோயில் பிரகார வலம் பூர்த்தி அடைய செய்கிறது. மன ஆரோக்கியம் சீரடைந்தாலே உடல் ஆரோக்யமும் சீரடைகிறது.

விரதங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பெற்றுத்தருகிறது என்பதை முன்னோர்கள் அன்றே கண்டறிந்து நம்மை ஆன்மிகப் பாதையில் இயக்க வைத்திருக்கிறார்கள். விரதங்களை இறைவனுக்காக மட்டுமல்ல நம் உடல் ஆரோக்யத்துக்காகவும் மேற்கொள்வோம்.
Tags:    

Similar News