ஆன்மிகம்

கிறிஸ்தவர்களின் தவக்கால நோன்பு இன்று தொடங்குகிறது

Published On 2017-03-01 05:26 GMT   |   Update On 2017-03-01 05:26 GMT
மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விபூதி புதனான இன்று ஆரம்பமாகும் தவக்காலம் ஈஸ்டர் பெருவிழா நாள்வரை 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் நோன்பு இருப்பார்கள்.
விபூதி புதன் அன்று ஆரம்பமாகும் தவக்காலம் துவங்கி ஈஸ்டர் பெருவிழா நாள்வரை 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் நோன்பு இருப்பார்கள். கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு பரிகாரமா கவும் இறைவனின் அருளை பெற்றுக் கொள்ளவும், கேட்ட வரம் கிடைக்கவும் தவக்காலத்தில் இறை மக்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். இந்த நோன்பு இருக்கும் முறையானது எல்லா மதங் களிலும் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருவது நாம் எல்லாம் அறிந்த ஒன்றே.

இஸ்லாம் சகோதரர்கள் ரம்லான் நாளுக்கு முன்னதாக 40 நாட்கள் நோன்பு இருக்கிறார்கள். இந்து மத சகோதரர்கள் சபரிமலைக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் 40 நாட்கள் கடும் விரதம் இருக்கிறார்கள்.

நோன்பு இருக்கும் வழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளதை விவிலிய பின் னணியிலும் சரித்திர பின்னணியிலும் காண முடிகிறது. அதற்கு சில உதாரணங்கள் வருமாறு:-

கிரேக்கர்கள் தங்களின் அறிவு கூர்மையை வளர்த்துக் கொள்ள நோன்பு இருப் பார்களாம். ரஷ்யர்கள் தங்கள் கடவுளின் ஓவியத்தை வரைவதற்கு முன்னர் நோன்பு இருப்பார்களாம். மோயீசன் சீனாய் மலையில் 40 நாட்கள் உண்ணாமல், உறங்காமல் நோன்பு இருந்து தான் 10 கற்பனைகளை பெற்றிருக்கிறார்.

இறைமகன் இயேசு மண்ணில் இறைபணியை துவங்குவதற்கு முன்னர் 40 நாட்கள் உண்ணாமல், உறங்காமல் நோன்பு இருந்தார் என்பதை புதிய ஏற்பாட்டில் காண்கிறோம்.



தவக்காலத்தில் செய்ய வேண்டியது என்ன?

இந்த தவக்காலத்தில் 40 நாட்களும் காவியுடுத்தி நோன்பிருந்து ஆலயத்திற்கு சென்று ஆண்டவரை வழிபடுவதால் மட்டும் ஆண்டவனின் இரக்கத்தை பெற்று விட முடியாது. இந்த தவக் காலமானது பாவம் செய்த மனிதன் தன்னை தானே திருத்திக் கொள்ள வாய்ப்பாக அருளப்பட்டுள்ளது.

ஆம், இந்த தவக்காலமானது கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய காலம் இது. எவரையும் ஏமாற்றி இருந்தால் இரு மடங்காக திரும்ப கொடுக்க வேண்டிய நேரம் இது. அனாதைகளையும், ஏழை களையும், ஆதரவற்றவர்க ளையும் தேடி சென்று உதவ வேண்டிய தருணம் இது.

எவரிடமும் பகைமை பாராட்டியிருந்தாலோ உடன் பிறந்தவர்கள், உற்றார் உறவினரிடம் சண்டையிட்டிருந்தாலோ மன்னித்து அவர்களுடன் சமாதானம் செய்ய வேண்டிய நேரம் இது. எல்லாவற்றுக்கும் மேலாக இயேசுவின் கட்டளைகளை கடைபிடித்து உண்மை கிறிஸ்தவனாக வாழ வேண்டும் என்பதேயே இந்த தவக்காலம் நமக்கு உணர்த்துகிறது.

எனவே இந்த தவக்காலத்தில் நோன்பு இருந்தும் ஏழைகளுக்கு உதவி செய்தும், அயலானை அன்பு செய்தும் ஆண்டவனின் அருளை பெறுவோம். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த விபூதி புதன் நம் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தட்டும் என தஞ்சாவூர் கிளமென்ட் அந்தோணிராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News