ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

ரமலான் மாதத்தில் மனிதனின் வழிகாட்டியாக பூமிக்கு வந்த ‘புனித குரான்’

Published On 2021-05-14 05:19 GMT   |   Update On 2021-05-14 05:19 GMT
இஸ்லாமிய மாதம் சந்திரனின் சுழற்சியை வைத்து கணக்கிடப்படுகிறது. சந்திர இயக்க மாதங்களில் ஒன்பதாவது மாதமான ரமலான் முஸ்லிம்களை பொருத்தவரையில் முக்கிய மாதமாக கருதப்படுகிறது.
நோன்பு பெருநாள் அல்லது ஈகைத் திருநாள் என்பது இஸ்லாமிய இருபெரும் திருநாட்களில் ஒன்றாகும்.

இஸ்லாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகிறது. ஈத் என்னும் அரபுச் சொல்லுக்கு கொண்டாட்டம் அல்லது திருநாள் பெருநாள் என்பது பொருளாகும்.

இஸ்லாமிய மாதம் சந்திரனின் சுழற்சியை வைத்து கணக்கிடப்படுகிறது. சந்திர இயக்க மாதங்களில் ஒன்பதாவது மாதமான ரமலான் முஸ்லிம்களை பொருத்தவரையில் முக்கிய மாதமாக கருதப்படுகிறது.

மனிதனின் வழிகாட்டி

இந்த மாதத்தில் தான் இஸ்லாமியர்களின் திருமறையான புனித குரான் பூமிக்கு மனிதனின் வழிகாட்டியாக இறங்கியது. ரமலான் மாத தலைப்பிறை தென்பட்டதும் உலகத்தின் பல்வேறு பாகங்களில் வாழும் முஸ்லிம்களும் அம்மாதத்தில் நோன்பிருப்பர்.

குறிப்பாக முஸ்லிமுக்கு நோன்பு கடமையானது. ஒரு முஸ்லிமுடைய புலனடக்கத்தையும், மனக்கட்டுப்பாட்டையும் உருவாக்கும் சிறந்த ஆன்மிக பயிற்சியாக இது உள்ளது. நோன்பின் அடிப்படை நோக்கம் வெறுமனே பசித்திருப்பதும் தாகித்திருப்பதுமன்று. இந்தப் பயிற்சியின் மூலம் இறை அச்சத்தை தன்னில் வளர்த்துக் கொள்வதேயாகும் என்பதை அல்-குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.

பெருநாள்

ரமலான் மாதத்தை தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டதும் நோன்பு பெருநாளைக் கொண்டாடுவர். ஒரு மாத காலமாக இறைவன் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து பசித்திருந்தும், தாகித்திருந்தும், புலன்களைக் கட்டுப்படுத்தி நோன்பு நோற்ற முஸ்லிம்கள் கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியையும், களிப்பையும் இப்பெருநாள் தினத்தன்று பெறுவர்.

இறைவனின் உதவி கிடைக்கும் காலம்

பிறர் நலம் நாடுவது தான் இஸ்லாம் என நபிகள் நாயகம் கூறி உள்ளார். ‘இறைதூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?’ என்று நபி தோழர்கள் கேட்டதற்கு ‘எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது’ என்று நபி கூறினார்.

‘நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்’. ஒருவர் தமது சகோதரனுக்கு உதவும் காலமெல்லாம் அவருக்கு இறைவனின் உதவி இருந்து கொண்டே இருக்கிறது’ என நபிகள் நாயகம் கூறி உள்ளார்.
Tags:    

Similar News