ஆன்மிகம்
இடலாக்குடி பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் தொழுகை நடந்த போது எடுத்த படம்.

ரம்ஜான் பண்டிகையையொட்டி வீடுகளில் நடந்த சிறப்பு தொழுகை

Published On 2021-05-14 03:05 GMT   |   Update On 2021-05-14 03:05 GMT
கேரளாவில் பிறை தெரிந்ததால், கேரளாவிலும், அதையொட்டி உள்ள குமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
முஸ்லிம்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்று நோன்பு. ரமலான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு இருப்பார்கள். ரமலான் மாதத்தை அடுத்து வரும் ஷவ்வால் மாத பிறை தெரிந்ததும், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, ஷவ்வால் மாத பிறை நேற்று முன்தினம் தமிழகத்தில் தென்படவில்லை. எனவே ரம்ஜான் பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாகுதீன் முகம்மது அயூப் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் கேரளாவில் பிறை தெரிந்ததால், கேரளாவிலும், அதையொட்டி உள்ள குமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

நாகர்கோவில், இடலாக்குடி, குளச்சல், திட்டுவிளை, தக்கலை, திருவிதாங்கோடு உள்பட பல பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கொண்டாடினார்கள்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரவர் வீடுகளிலேயே சிறப்பு தொழுகையை முஸ்லிம்கள் நடத்தினார்கள். பெரும்பாலும் வீடுகளின் மொட்டை மாடியிலேயே தொழுகை நடத்தப்பட்டது. தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்து, ரம்ஜான் வாழ்த்துக்களை பறிமாறி கொண்டனர்.
Tags:    

Similar News