ஆன்மிகம்

நோன்பாளிக்கு கிடைக்கும் சொர்க்கம்

Published On 2019-05-09 06:23 GMT   |   Update On 2019-05-09 06:23 GMT
ஒரு மனிதன் நோன்பு பிடிக்க தொடங்கிய காலம் முதல் சொர்க்கம் செல்லும் வரை அந்த மனிதனுக்காக சொர்க்கம் தன்னை அலங்கரித்துக் கொண்டே இருக்கும்.
ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் மனிதனுக்கு சொர்க்கம் அலங்கரித்து வைக்கப்படும். சொர்க்கத்தை பார்த்து இறைவன் இவ்வாறு கட்டளையிடுவான். உலகத்தில் சிரமத்தில் தவித்த என் அடியான் இங்கே வந்து ஓய்வு எடுத்து நிம்மதியடைய வேண்டும் என்பதற்காக சொர்க்கமே உன்னை அலங்கரித்து கொள்’

எனவே ஒரு மனிதன் நோன்பு பிடிக்க தொடங்கிய காலம் முதல் சொர்க்கம் செல்லும் வரை அந்த மனிதனுக்காக சொர்க்கம் தன்னை அலங்கரித்துக் கொண்டே இருக்கும்.

நோன்பு வைத்து அதன் மூலம் பெற்ற நன்மையால் சொர்க்கம் செல்லும் அடியான் அந்த சொர்க்கத்தின் சிறப்பைப்பார்த்து இவ்வாறு கூறுவானாம்: ‘ வருடத்தில் ஒரு மாதம் தானே நேன்பு வைத்தேன். அதற்கே இவ்வளவு அழகான சொர்க்கமா?. இது முன்பே தெரிந்திருந்தால் வருடம் முழுவதும் நோன்பு நோற்று அதிக நன்மைகள் செய்திருப்பேனே.

மனிதன் கற்பனை செய்து பார்க்க முடியாத பல்வேறு சிறப்புகளை பெற்ற சொர்க்கத்தில் நாம் அனைவரும் இடம் பெற உதவும். இந்த ரமலான் மாதத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முறையாக நோன்பு வைத்து தொழுகையில் ஈடுபட்டு தான தர்மங்கள் செய்து பாவமன்னிப்பு கேட்டு இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியபடி இந்த ரமலான் நாம் அதிகமதிகம் இறையவனிடம் பிரார்த்தனை செய்து நரகத்தை விட்டு பாதுகாப்பு தேடி சொர்க்கத்தை கேட்க வேண்டும். அதிலும் குறிப்பாக நோன்பு கடமையை நிறைவேற்றுபவர்களுக்கு என்று ஒரு சொர்க்கம் உண்டு. அதன் பெயர் ‘ரய்யான்’.

மறுமை நாளில் ஒரு மனிதனின் பாவ புண்ணிய கணக்குகள் இறைவன் முன்பு சமர்ப்பிக்கப்படும். அப்போது அந்த மனிதன் தத்தளித்து கொண்டு இருப்பான். அப்போது இறைவன் தரப்பில் இருந்து ‘ரமலான் மாதங்களில் நோன்பு வைத்திருப்பவர்கள் எங்கே?’ என்று ஒரு அழைப்பு வரும். இதைக்கேட்டு நோன்பு வைத்தவர்கள் எழுந்து நிற்பார்கள். அப்போது அவர்களை பார்த்து இறைவன் ‘நீங்கள் அனைவரும் ரய்யான் என்ற இந்த சொர்க்கச்சோலைக்குள் செல்லுங்கள்’ என்பான். இதையடுத்து நோன்பாளிகள் அனைவரும் அந்த வழியாக சொர்க்கத்திற்குள் செல்வார்கள். கடைசி நோன்பாளி சென்றதும் அந்த வழிமூடப்படும்.

“ எவர் நோன்பாளிக்கு நோன்பு திறக்கும் நேரத்தில் அவரின் தாகம் நீங்க நீர் வழங்கினாரே அவருக்கு மறுமையில் ‘ஹவ்ழுல் கவ்தர்’ என்ற நீர் தடாகதில் இருந்து அல்லாஹ் தண்ணீர் வழங்குவான். அதன் மூலம் சொர்க்கம் செல்லும் காலம் வரை அவருக்கு தாகம் என்பது ஏற்படாது” என்பது நபி மொழியாகும். எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் போது ‘ நன்மையான காரியங்களை போட்டிபோட்டுக்கொண்டு செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்துவார்கள்.

வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி தாங்கல் சென்னை.
Tags:    

Similar News