ஆன்மிகம்
வாகையடி பக்கீர்பாவா ஒலியுல்லா தர்கா கந்தூரி விழாவையொட்டி யானை ஊர்வலம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

திட்டுவிளை வாகையடி பக்கீர்பாவா ஒலியுல்லா தர்கா கந்தூரி விழா கொடியேற்றம்

Published On 2019-04-04 03:36 GMT   |   Update On 2019-04-04 03:36 GMT
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திட்டுவிளை வாகையடி பக்கீர்பாவா ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றம் நடந்தது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தர்காக்களில் திட்டுவிளை வாகையடி பக்கீர்பாவா ஹயாத் ஒலியுல்லா தர்காவும் ஒன்று. இங்கு ஆண்டு தோறும் கந்தூரி கொடியேற்று விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தூரி கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி பிற்பகல் 1 மணிக்கு ஜூம்மா பள்ளிவாசல் முன்பிருந்து பிறைகொடியை தாங்கிய யானை ஊர்வலம் சிங்காரி மேளத்துடன் புறப்பட்டது.

இந்த ஊர்வலம் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக வலம் வந்து இரவு தர்கா மைதானத்தை அடைந்தது. அதைதொடர்ந்து பக்தர்களின் இறைநாம முழக்கத்துடன் மைதானத்தின் முன் உள்ள அலங்கார கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்தவர்களால் நேர்ச்சை வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து முஸ்லிம்களின் புனித இரவாக கருதப்படும் மிஹ்ராஜ் இரவு என்பதையொட்டி இஸ்லாமிய மார்க்க பேரூரை நடைபெற்றது. பேரூரை நிகழ்ச்சிக்கு உதுமான் லெப்பை சாகிபு சுன்னத் ஜமாத் பள்ளி அறக்கட்டளை தலைவர் மைதீன்பிள்ளை தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற வன அலுவலர் முகமது அனிபா மற்றும் பி.எஸ்.என்.எல். அலுவலர் அப்துல் ஹலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காயல்பட்டணம் பெண்கள் அரபிக் கல்லூரி முதல்வர் அகமது அப்துல் காதிர் ஆலீம் சிறப்புரையாற்றினார். தொடக்கத்தில் ஜூம்மா பள்ளி இமாம் சயீது ரஹ்மானி வரவேற்றார். முடிவில் விழாக்குழு தலைவர் நாஞ்சில் காஜா நன்றி கூறினார்.

விழாவின் கடைசி நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தப்ரூக் என்கிற நேர்ச்சை வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடக்கிறது. முடிவில் விழாக்குழு செயலாளர் முகமது ரபீக் நன்றி கூறுகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை உதுமான் லெப்பை சாகிபு ஜூம்மா பள்ளி டிரஸ்ட் நிர்வாகம் மற்றும் விழாக் கமிட்டியினரோடு பொதுமக்களும் இணைந்து செய்துள்ளனர்.
Tags:    

Similar News