ஆன்மிகம்
சிவன் வழிபாடு

சகட தோஷத்திற்கு தினமும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

Published On 2021-05-24 12:58 IST   |   Update On 2021-05-24 12:58:00 IST
சகட தோஷம் சர்க்கரை நோய் போன்றது வந்து விட்டால் போகாது. வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிடுவது போல சகட தோஷத்திற்கு தினசரி பரிகாரம் செய்ய வேண்டும்.
சகட தோஷம் கொண்டு பிறந்தவன் மந்திரியாக ஆனால் கூட பத்து நாளில் பதவியை பறிகொடுத்து விடுவான் என்று சொல்வார்கள். விறகு வெட்டி கஷ்டப்படுகிறானே என்று ஒரு தொழிலாளிக்கு சந்தன காட்டையே எழுதி வைத்தானாம் அரசன். ஆனால் அந்த தொழிலாளி சந்தன காட்டின் மகத்துவத்தை அறியாமல் சந்தன மரத்தை வெட்டி கட்டைகளை எரித்து கரித்துண்டுகளை விற்று பிழைப்பு நடத்தினானாம். இப்படிப்பட்ட அப்பாவிகளை கூட சகட தோஷத்தின் சகபாடிகள் என்று கூறலாம்.

ஒருவரது ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் சந்திரன் இருந்தாலும் குரு நின்ற ராசிக்கு ஆறு, எட்டு, பனிரெண்டு ஆகிய இராசிகளில் சந்திரன் இருந்தாலும் அந்த ஜாதகத்தை சகட தோஷ ஜாதகம் என்று கூறுவார்கள். இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்தோம் என்றால் பலவிதத்திலும் அவர்கள் சோதனை மிகுந்தவர்களாகவே இருப்பதை காணலாம்.

சகட தோஷம் சர்க்கரை நோய் போன்றது வந்து விட்டால் போகாது. வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிடுவது போல சகட தோஷத்திற்கு தினசரி பரிகாரம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பூரண விடுதலை உண்டு. தினசரி பரிகாரம் என்றவுடன் அதை செய்ய முடியுமா? முடியாதா? என்று கவலைப்படவேண்டாம். மிக சுலபமாக செய்து விடலாம்.

ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினசரி காலையில் நூற்றி எட்டுமுறை சொல்லி வாருங்கள். அமாவாசை தோறும் பசுவிற்கு பச்சரிசி தவிடு, மற்றும் அகத்திக்கீரை கொடுத்து வாருங்கள். சகட தோஷம் உங்களை கண்டாலே ஓடி ஒளிந்து கொள்ளும். துன்பத்தை விலக்கி இன்பமாக வாழலாம்.

Similar News