ஆன்மிகம்
சிவன்

தீராத நோய் மற்றும் இந்த பிரச்சனைகள் தீர சிவபெருமானை வழிபடலாம்

Published On 2020-11-24 08:08 GMT   |   Update On 2020-11-24 08:08 GMT
தீராத நோய் உள்ளவர்கள், கஷ்டம், திருமண தடை, வீடு கட்ட முடியாதவர்கள் சிவபெருமானை நினைத்து வழிபட்டால் நிச்சயமாக அவர்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் படிப்படியாக குறையும்.
மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சதுர்த்தி திதி இந்த இரண்டு நாட்களும் வரும். இது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். தீராத நோய் உள்ளவர்கள் மாதம்தோறும் இந்த இரு தினங்களிலும் ஒருவேளை மட்டும் உணவு அருந்தி சிவபெருமானை நினைத்து வழிபட்டால் நிச்சயமாக அவர்களுக்கு இருக்கும் நோய் நீங்கும். தொடர்ந்து மாதம் தோறும் இந்த விரதத்தை இருந்து பாருங்கள். எப்படிப்பட்ட தீர்க்கமுடியாத வியாதியாக இருந்தாலும் அதற்கு ஒரு தீர்வு கட்டாயமாக உங்கள் கண்களுக்குப் புலப்படும் என்பது உண்மை. உடல்நிலை சரியில்லாதவர்கள் சாப்பிடாமல் இருப்பது கஷ்டம் தான். முடிந்தவரை பழம் பால் குடித்து மட்டுமாவது விரதத்தை மேற் கொள்ளுங்கள். 

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று நடக்காமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கின்றதா? சூரிய உதயத்திற்கு முன்பாக தீபமேற்றி 48 நாட்கள் தொடர்ந்து உங்கள் வேண்டுதல்களை வையுங்கள். நிச்சயம் வெற்றிதான். கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் வெற்றியை அடைந்து விடுவீர்கள். 

உங்கள் வாழ்க்கையில் கஷ்டத்தை தவிர வேறு எதையுமே சந்தித்ததில்லையா? எதிர்பாராத திருப்பத்தை பெறவேண்டுமா? ‘அம்மாவாசை அன்று திங்கட்கிழமை’ அல்லது திங்கட்கிழமைகளில் வரும் அமாவாசை எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளலாம். இரண்டுமே ஒன்றுதான். அந்த நாளில் சிவன் கோவிலுக்கு சென்று சிவ பெருமானை மனதார நினைத்து வழிபட்டால் நிச்சயமாக உங்களது வாழ்க்கையில் திருப்பம் அமையும். 

இறைவனுக்கு அடுக்கு அரளி பூ, அடுக்கு செம்பருத்தி பூ இவைகளை வைத்து பூஜை செய்து வந்தால் உங்களது தொழிலில் இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அது விலகிவிடும். தொழில் முன்னேற்றத்திற்கு தேவையான வளர்ச்சியையும் உங்களுக்கு இந்த வழிபாடு நிச்சயமாக காட்டும். நீங்களே அறிவாற்றல் மிக்கவர்களாக மாறிவிடுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை அன்று பச்சைப்பயறு, மரிக்கொழுந்து இவைகளை புதன் பகவானுக்கு தொடர்ந்து படைத்து வந்தால் உங்கள் ஜாதகத்தில் இருக்கும் புதன் கிரக கோளாறுகள் விலகும். சந்திரனின் அருளை முழுமையாகப் பெற வேண்டுமென்றால் பாரிஜாதம், மல்லி, அல்லி போன்ற வெள்ளை நிற பூக்களை சந்திரனுக்கு சூட்டி வழிபட வேண்டும். இதன்மூலம் அதிர்ஷ்டமான வாழ்க்கையை நம்மால் பெற முடியும். அதிர்ஷ்டம் கெட்டவர்கள் என்று உங்களை யாராலும் சொல்ல முடியாத அளவிற்கு நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். 

கையில் பணம் இருந்தும் வீடு கட்ட முடியாதவர்கள், 6 வாரம் முருகன் கோவிலுக்கு சென்று, அரளி பூ அர்ச்சனை செய்து, 6 ஏழை குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்கித் தந்தால் நிச்சயமாக கைமேல் பலன் உண்டு. உங்களது கஷ்டம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் திங்கட்கிழமை தோறும் தேங்காய் எண்ணெய் கொண்டு விநாயகருக்கு தீபம் ஏற்றி வாருங்கள். உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு இருக்கும் எந்த ஒரு தடையையும் இந்த தீபம் நீக்கிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீண்ட நாட்களாக நல்ல வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்து வந்தால் 21ஆவது வாரம் உங்கள் கையில் நல்ல வேலை நிச்சயம். ஐந்து மாதங்கள் ஆகும் என்று யோசிக்காதீர்கள். வருடக்கணக்கில் கூட பல பேர் வேலை தேடி கிடைக்காமல் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீல சங்கு பூவை இறைவனுக்கு சமர்ப்பித்தால் எப்படிப்பட்ட தரித்திரமாக இருந்தாலும் அது நீங்கிவிடும். சனி பகவானின் அருளாசி பெற அவருக்கு நீல சங்குப்பூ சூட்டுவது நல்ல பலனைத் தரும். நம் வீட்டு பூஜை அறையில் மனோரஞ்சித பூவை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்து வழிபட்டால், கணவன் மனைவிக்கு இருக்கும் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் விரைவில் ஒரு முடிவுக்கு வந்துவிடும். எப்படிப்பட்ட பூவாக இருந்தாலும் மொட்டுக்களாகவே இருந்தால், அதை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்ய கூடாது. மலரும் பூக்கள் தான் இறைவனுக்கு சிறந்தது. 

கடைசியாக ஒரு குறிப்பு. நம் முன்னோர்கள் இதை காலம் காலமாக கடைப்பிடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மாதத்தின் கடைசி மூன்று நாட்களில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்குவது அவ்வளவு சிறந்ததல்ல. (அதாவது சித்திரை முதல் பங்குனி வரை பன்னிரண்டு மாதங்களிலும் கடைசியில் வரும் மூன்று நாட்கள்) தமிழ் வருடத்தின் கடைசி 15 நாட்கள்(பங்குனி கடைசியில்) எந்த ஒரு சுப காரியத்தையும் செய்யக்கூடாது. முடிந்தவரை வீட்டின் விசேஷங்களை கூட வைக்காமல் தடுப்பது நன்மை தரும். புதிய தொழில் தொடங்க வேண்டாம்.

Tags:    

Similar News