ஆன்மிகம்
நாகராஜா கோவில்

நாகதோஷ நிவர்த்திக்கு சிறந்த பரிகார தலம்

Published On 2020-04-01 06:27 GMT   |   Update On 2020-04-01 06:27 GMT
நாகர்கோவில் நாகேஸ்வரர் ஆலயம் சென்று மூன்று இரவு தங்கி ஈசனை வணங்கினால் நாகதோஷத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
நாகர்கோவில் நாகேஸ்வரர் ஆலயம் சென்று மூன்று இரவு தங்கி ஈசனை வணங்கினால் நாகதோஷம் பரிகாரமாகும். வசதி உள்ளவர்கள் தங்கத்தால் குழந்தை பதுமை செய்து ஏழைக்கு அன்னம் அளித்து வேட்டி துண்டு தாம்பூலம் பழத்துடன் தங்க விக்ரகத்தைத் தானம் செய்தால் நாகதோஷம் விலகும்.

தங்கத்தில் செய்ய சக்தியில்லாத வர்கள் வெள்ளியில் செய்து தானம் அளிக்கலாம். தங்கம் அல்லது வெள்ளி சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகம் செய்து, பூசித்து பிறகு ஒருவருக்கு புது வேட்டி துண்டு தாம்பூலம் தட்சணையுடன் நாக விக்கிரகத்தையும் தானம் செய்யலாம்.

கருங்கல்லில் நாகப் பிரதிஷ்டை செய்து ஆறு, குணம் அருகில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகத்துடன் பூசித்து தினமும் 108 முறை வலம் வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாகும்.

இரண்டு நாகங்கள் பின்னிக் கொண்டு ஒன்றின் முகத்தை ஒன்று பார்க்கு மாறு கல்லில் வடித்து அரசமரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள்கள் விளக்கேற்றி வைத்து பூசித்தால் நாகதோஷம் விலகும்.

கண்ணன் நடனமாடு வது போலவும், அவனுக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போலவும் கல்லில் வடித்து வேம்பும் அரசும் இணைந்திருக்கும் குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் விளக்கேற்றி வலம் வந்து வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் சிலை வடித்து நதிக்கரை அல்லது, குளக்கரையில் பிரதிஷ்டை செய்து, நாற்பது நாள் பூசித்து வலம் வந்தால் நாகதோஷம் பரிகாரமாகும்.

குளம் அல்லது நதிக்கரையில் அரசு, வேம்பு கன்றுகளை நட்டு, முறையாகத் திருமணம் செய்து குறைந்தது நூறு தம்பதிகளுக்கு விருந்தும் தட்சணை தாம்பூலம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகி சத்புத்திரர்கள் பிறப்பதுடன் வாழ்க்கையும் இன்பமாக அமையும்.  வசதி உள்ளவர்கள் ஓர் ஏழைக்கு பயிர் நிலம் வாங்கி தானம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

ஓர் ஏழைக்கு அன்னம் அளித்து புதுவேட்டி துண்டு, தாம்பூலம் தட்சணையுடன் பால் பசுவும் கன்றையும் தானம் செய்தால் நகதோஷம் விலகி சத்புத்திரர்கள் பிறப்பார்கள். வீட்டில் ராகு கேது படங்களை வைத்து தினமும் பூசை செய்யலாம்.

தினமும் ராமாயணம் படிக்கலாம்.  மாதம் ஒரு சிவாலயம் சென்று ஈசனை வழிபட்டு வரலாம். நவக்கிரகங்களை பிரதட்சணம் செய்யலாம். ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் ஒரு தம்பதிக்கு அன்னம் அளித்து தாம்பூலம் தட்சணை கொடுத்து வலம் வந்து நமஸ்கரித்து வருவதால் எல்லா தோஷங்களும் நிவர்த்தியாகி வாழ்க்கை மகோன்னதமாக இருக்கும்.

புத்திரதோஷம் ராகுவால் ஏற்பட்டால் செவ்வாய்க் கிழமைகளில் ராகு காலத்தின் போது ராகுவின் இஷ்ட தெய்வமான பத்ரகாளிக்கு எலுமிச்சம் பழத்தோலில் எண்ணெய் விட்டுத் திரிபோட்டு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். தோஷம் நீங்கி புத்திரர் பிறந்து நீண்ட ஆயுளுடன் இருப்பர். நவக்கிரகங்களை பிரதட்சணம் செய்யச் செல்லும் போது ஒரு பிடி உளுந்து எடுத்துச் செல்லவும். ராகுவின் பாதங்களில் உளுந்தையும் கேதுவின் பாதங்களில் கொள்ளையும் வைத்து வணங்கி வந்தால் நாக தோஷம் பரிகாரமாகும்.

ராகுவை பிரீதி செய்ய கறுப்பு வேட்டி வாங்க தானம் செய்வதாலும் நாகதோஷம் அகலும்.  கேதுவைப் பிரீதி செய்யவும் புத்திர தோஷத்துக்குப் பரிகாரமாகவும் சிவந்த வேட்டியை வாங்கி தானம் செய்யலாம். புத்திர தோஷமுள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை நவக்கிரக ஹோமம் செய்து வந்தால் தோஷ பரிகாரத்துடன் லட்சுமி கடாட்சமும் ஏற்படும். 
Tags:    

Similar News