ஆன்மிகம்

வேண்டுதல்களை நிறைவேற்றும் சண்டிகேஸ்வரர் வழிபாடு

Published On 2017-12-20 09:16 GMT   |   Update On 2017-12-20 09:16 GMT
சிவபெருமானின் பிரதிநிதியான சண்டிகேஸ்வரரை வில்வ இலை கொண்டு மாலைகள் சூட்டி வழிபட்டால் வாழ்வில் அனைத்து வளங்களும் பெறலாம்.
சிவ தலங்களில் நந்தியம் பெருமானும், சண்டிகேஸ்வரரும் கட்டாயம் இடம்பெறுவார்கள். நந்தியின் காதுகளில் நம் வேண்டுதல்களை கூறினால் பலிக்கும் எனும் நம்பிக்கை கொண்டவர்கள், ஏன் சண்டிகேஸ்வரரிடம் மட்டும் சப்தம் போடாமல் வேண்ட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா?

சிவனின் மெய்க்காவலர் நந்தி என்றால், ஈசனின் ஆலயக் காப்பாளர் சண்டிகேஸ்வரர். ‘சிவன் சொத்து குலநாசம்’ என்று சொல்வார்கள். பொதுவாகவே கோவில்களுக்கு சென்றால் நாம் அங்கு தேவைப்படும் சேவைகளை மட்டுமே செய்ய வேண்டும். அங்கு இருக்கும் எந்தப் பொருளுக்கும் ஆசைப்படுவதோ, அதை தனக்குரியதாக்கி எடுத்து வருவதோ நல்லதல்ல.

சிவனின் உதவியாளரான சண்டிகேஸ்வரர், எந்நேரமும் சிவ சிந்தனையில் ஆழ்ந்து தியானத்தில் இருப்பவர். மனிதனுக்கு கேட்கும் திறன் கொண்ட காதுகளைப்போல் சிவனின் ஆலயத்தில் சண்டிகேஸ்வரர் குடிகொண்டிருக்கும் இடம் இறைவனின் செவியாகிறது.

இறைவனிடம் நாம் வேண்டுவதை அவரின் உதவியாளரான சண்டிகேஸ்வரர் தியானத்திலேயே கேட்டு உணர்ந்து, அவைகளை அவரவர் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப கணக்கெழுதி இறைவனிடம் சமர்பிப்பதாக ஐதீகம். ஆகவே தான் சிவன் கோவில் சென்றால் இவரைப் பார்க்காமல் செல்லக்கூடாது என்பார்கள்.

யோக நிலையில் உள்ள இவரை வணங்கினால் நல்ல பேச்சுத் திறனுடன், நினைவாற்றலும் பெருகி அறிவு வளரும். எந்நேரமும் கண்மூடி சிவசிந்தனையில் இருக்கும் இவரின் தியானம், நம்மால் கலைந்து விடக் கூடாது என்றே அவரை அமைதியாக வணங்குமாறு அறிவுத்துகின்றார்கள் பெரியவர்கள். ஆனால் நான் ஆலயத்திலிருந்து எதுவும் எடுத்துச்செல்ல வில்லை என்பதை அவருக்கு காட்டும் வண்ணம் இரு கைகளையும் சப்தமில்லாமல் துடைத்துக் காண்பிக்க வேண்டும்.

இவரை நம்பிக்கையுடன் வணங்கினால் தொலைந்து போன பொருட்களும் நமக்குக் கிடைக்கும். இவருக்கு உரிய திதிகள் பிரதமை மற்றும் நவமி ஆகும். புதன்கிழமை இவரை வணங்கிட ஏற்ற நாள். சிவபெருமானின் பிரதிநிதியான இவருக்கும் வில்வ இலை கொண்டு மாலைகள் சூட்டி வழிபட்டால் வாழ்வில் அனைத்து வளங்களும் பெறலாம்.
Tags:    

Similar News