ஆன்மிகம்
அருட்திரு அறிவர் மோகன்ராஜ் தேவ செய்தி வழங்கியதையும், இதில் கலந்து கொண்டவர்களையும் படத்தில் காணலாம்.

சீயோன் ஆலயத்தில் 31-வது ஆண்டு பிரதிஷ்டை, அசன பண்டிகை கோலாகலம்

Published On 2021-03-05 06:51 GMT   |   Update On 2021-03-05 06:51 GMT
பெங்களூரு கே.பி.அக்ரஹாரத்தில் உள்ள சீயோன் ஆலயத்தில் 31-வது ஆண்டு பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை கோலாகலமாக நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
பெங்களூரு கே.பி.அக்ரஹாரம் நேதாஜி நகரில் அமைந்து உள்ள சீயோன் ஆலயத்தில் ஆண்டுதோறும் பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சீயோன் ஆலயத்தில் 31-வது ஆண்டு பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்த பண்டிகையை ஆலயத்தின் ஆயர் செல்வி தாசன் அதிகாலை 5.30 மணிக்கு ஜெயம் செய்து தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக தூய லூக்கா ஆலயத்தின் ஆயர் வில்சன் தாசன் கலந்து கொண்டார். அருட்திரு அறிவர் மோகன்ராஜ் திருச்சபையில் தேவசெய்தியை வழங்கி பேசியதாவது:-

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சீயோன் ஆலயம், சிறிய ஆலயமாக இருந்தது. தற்போது இந்த ஆலயம் பிரமாண்ட வளர்ச்சி அடைந்து உள்ளது. இதற்கு ஆலயத்தின் ஆயர், பரிபாலன குழு மற்றும் சபை மக்களே காரணம். சீயோன் ஆலயம் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.

மக்களாகிய நாம் அனைவரும் தேவனுடைய கரங்களுக்குள் அடங்கி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தகுந்த நேரத்தில் தேவன் நம்மை உயர்த்துவார். இந்த உலகத்தில் என்ன நடந்தாலும் அதுகுறித்து நாம் கவலைப்பட வேண்டாம். எல்லாவற்றையும் தேவன் பார்த்து கொள்வார். மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதே நேரத்தில் விவேகத்திலும் உறுதியாக இருக்க வேண்டும். தேவன் தான் நம்மை எப்போதும் சீர்படுத்தி, சிறப்பு படுத்தி நிலை நிறுத்துகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதன்பின்னர் அவர் 31-வது ஆண்டு பிரதிஷ்டை கொண்டாடும் சீயோன் ஆலய ஆயர் செல்வி தாசன் மற்றும் திருச்சபையினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

இதனை தொடர்ந்து சீயோன் ஆலயத்தின் ஆயர் செல்வி தாசன் பேசியதாவது:-

31-வது ஆண்டு பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை கொண்டாடும் உங்களுக்கு எனது அன்பு வாழ்த்துகள். அசனம் என்ற வார்த்தை ஒன்று சேர்ந்து சாப்பிடுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. நமது ஆலயத்தில் நடக்கும் அசன பண்டிகை இணைந்து சாப்பிடுதல் மற்றும் அனைத்து சமூக மக்களின் ஒற்றுமைக்கு ஒரு அடையாளம். அசன விருந்து சமய வேறுபாடுகளை கடந்ததாக மாற வேண்டும்.

இந்த விருந்து திருச்சபையின் பிரிவினைகளை கலைந்து ஒரே குடும்பமாக வாழ வழிவகுக்கிறது. இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாட பணமும், பொருளும் தந்து உதவி செய்த அனைவரையும் அன்போடு வாழ்த்துகிறேன். கொரோனா காலத்திலும் நம்மை பாதுகாத்த ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து மதியம் 12 மணியளவில் சிறப்பு ஆராதனைக்கு பிறகு அசன பண்டிகை நடைபெற்றது. அசன விருந்தை ஆயர் செல்வி தாசன் தொடங்கி வைத்தார். இந்த விருந்தில் நேதாஜி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக திருச்சபையில் இன்னிசையுடன் கூடிய ஆராதனை பாடல்கள் இடம்பெற்று இருந்தன.

ஆராதனையில் சீயோன் ஆலய குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர். விழாவையொட்டி ஆலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இது காண்பவர்களின் கண்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய ஆயர் செல்வி தாசன், செயலாளர் சாம்ராஜ் தேவசீலன், பொருளாளர் பீட்டர் தங்கதுரை, கமிட்டி உறுப்பினர்கள், ஆலய ஆண்கள், பெண்கள் ஐக்கியம், வாலிபர்கள் ஐக்கியம், ஞாயிறு பள்ளி, சீயோன் ஆலய குடும்பத்தினர் செய்து இருந்தனர். மேலும் பண்டிகையில் பல்வேறு தேவாலயங்களை சேர்ந்த ஆயர்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அசன விருந்தை தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் யோவான் குழுவினர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News