ஆன்மிகம்
இயேசு

பிதாவாகிய தேவனின் அன்பு

Published On 2021-02-19 04:06 GMT   |   Update On 2021-02-19 04:06 GMT
இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை காணும் போது பிதாவாகிய தேவன் தமது ஜனத்தின் மீது வைத்த அவரது அன்பையும் நாம் காண இயலும்.
இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை காணும் போது பிதாவாகிய தேவன் தமது ஜனத்தின் மீது வைத்த அவரது அன்பையும் நாம் காண இயலும். தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு அவரைதந்து  அருளி உலகத்தின் அன்பு கூர்ந்தார். ஆதாமின் பாவத்தின் மூலம் அடிமையப்பட்டுபோன மனுக்குலத்தின் மீட்பிற்காக தேவன் தம்முடைய சொந்த குமாரனை சிலுவையிலே ஒப்புக்கொடுத்தார். தம்முடைய ஒரே பேறான குமாரனை ஒப்புக்கொடுத்து அவருடைய மரணத்தின் மூலம் உலகை மீட்பதே பிதாவின் மீட்பின் திட்டம். தம்முடைய சொந்த குமாரன் என்றும் பாராமல் நமக்காக இயேசுவை சிலுவையில் அறையும் படி பிதாவாகிய தேவன் ஒப்புக்கொடுத்ததே அவரது அன்பு ஆகும்.

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினால் தேவன் நம் மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்(ரோ:5:78) என்று வேதம் தேவனுடைய அன்பை வெளிப்படுத்துகிறது. பழைய ஏற்பாட்டுக்காலத்திலே நியாயப்பிரமாணம் பாவம் செய்தவர்களிடத்தில் அன்பையோ இரக்கத்தையோ காண்பிக்கவில்லை. பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் கூறுகிறது. பாவம் செய்த மனுக்குலத்திற்கு எவ்வித இரக்கமும் காட்டாமல் கடுமையான தண்டனை அந்நாட்களில் வெளிப்படுத்தப்பட்டது.

ஆனாலும் அன்புள்ள தேவன் முழு மனுக்குலத்தினையும் மீட்டெடுக்க கிருபையாய் தமது குமாரனை அனுப்பினார். வேதனைகளின் மத்தியில் வாழ்ந்த ஜனங்களை பார்த்து கிறிஸ்துவானவர் மனதுருகினார். கிருபையுள்ள வார்த்தைகளை ஜனங்கள் மத்தியிலும் தேவாலயத்திலும் பிரசங்கித்தார். பாவத்திலே வாழ்ந்து தங்களுக்கு மீட்பே இல்லையோ என ஏங்கித்தவித்த முழுமனுக்குலத்துக்காகவும் தம் அன்பை வெளிப்படுத்த கல்வாரி சிலுவையிலே ஜீவனையும் கொடுத்தார். நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது.

நல்லவனுக்கு ஒருவேளை ஒருவன் மரிக்க துணிவான். முழு உலகமும் கிறிஸ்துவானவர் தம் அன்பால் சிந்தின ரத்தத்தினாலே மீட்பை பெற்றது. பாவத்தின் சம்பளம் மரணம். தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன். இது உங்களால் உண்டானதல்ல. இது உங்களால் உண்டானதல்ல. இது தேவனுடைய ஈவு (எபோ:2:8) நாமும் சகோதரருக்காக ஜீவனை கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம் (யோ:3:16) என்று வேதம் கூறுகிறது. பிரியமானவர்களே தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்பு கூர்ந்திருக்க நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு கூறக் கடனாளிகளாயிருக்கிறோம்.

அவருடைய பிள்ளைகளாகிய நாம் கிறிஸ்துவின் அன்பை உலகிலே வெளிப்படுத்துவோம். நாம் இரக்கத்தை பெறவும் ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும் தைரியமாய் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம் என்று வேதம் அனைவருக்கும் இந்த கிருபையை பெற்றுக்கொள்ள அழைப்பு கொடுக்கிறது. நாமும் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவோம். தேவனுக்குரியவர்களாய் வாழ்வோம்.

போதகர் அமல்ராஜ்.

பெத்தேல் ஏ.ஜி,திருச்சபை, மண்ணரை, திருப்பூர்
Tags:    

Similar News