ஆன்மிகம்
பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

Published On 2021-02-18 05:05 GMT   |   Update On 2021-02-18 05:05 GMT
தவக்காலம் தொடக்கத்தையொட்டி பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. திருப்பலிக்கு பின்னர் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கத்தையொட்டி நேற்று சிறப்பு திருப்பலி நடந்தது. அப்போது கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று கையில் ஏந்தி வந்த குருத்தோலைகளை எரித்து அதிலிருந்து கிடைத்த சாம்பலை புனிதம்செய்து ஆலயத்துக்கு வந்தவர்களின் நெற்றியில் பூசப்பட்டது. இதையடுத்து பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதில் துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தை ராஜ், உதவி பங்குத்தந்தை அருண் சவரிராஜ், ஆன்மிக தந்தையர் அருளானந்தம், கருணைதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் மாலையில் திருப்பலிக்கு பின்னர் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது.

பூண்டி மாதா பேராலயத்தில் தவக்காலத்தின் போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை சிலுவைப்பாதை நடைபெறும். அடுத்த மாதம் (மார்ச்) 26-ந் தேதி மைக்கேல் பட்டி ஆலயத்தில் இருந்து தவக்கால நடைபயணத்தை குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி அடிகளார் தொடங்கி வைக்கிறார்.

நடைபயணம் பூண்டி மாதா பேராலயத்தை அடைந்தவுடன் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டு சிலுவைப்பாதை நடைபெறும். அடுத்த மாதம் 28-ந் தேதி ஏசு ஜெருசலேம் நகருக்கு வருகை தந்ததை வரவேற்கும் விதமாக குருத்தோலை ஞாயிறு பவனி நடக்கிறது. இந்த பவனி பேராலய மக்கள் மன்றத்தில் இருந்து தொடங்கி பூண்டி மாதா பேராலயத்தில் முடிவடையும். இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர், துணை அதிபர், தியான மைய இயக்குனர் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News