ஆன்மிகம்
புனித செபஸ்தியார்

ரோமாபுரியில் இருந்து வந்த செபஸ்தியார் சிலை

Published On 2021-01-28 08:04 GMT   |   Update On 2021-01-28 10:27 GMT
குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளையில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் குடும்ப விழா மற்றும் 103-வது ஆண்டு விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளையில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் குடும்ப விழா மற்றும் 103-வது ஆண்டு விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

சிறப்பு

புனித தோமையார் வழியாக திருமுழுக்கு பெற்ற சில கிறிஸ்தவ குடும்பங்கள் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதியில் குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகில் உள்ள மாடத்தட்டுவிளையில் தங்கியதாகவும், இவர்கள் தான் மாடத்தட்டுவிளையில் குடியமர்த்தப்பட்ட முதல் கிறிஸ்தவ பூர்வீக குடிமக்கள் என்றும், மாடத்தட்டுவிளை ஆலயத்தில் உள்ள விளக்குத்தூண் மற்றும் கல்வெட்டு அதன் தொன்மைக்கு சான்றாக விளங்குகிறது.

இந்த கல் விளக்குதூண் 15-2-1371-ல் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அந்த கல் விளக்குத்தூண் தற்போது ஆலயத்தி்ன் வடமேற்கு மூலையில் நிற்கிறது. இந்த கல்வெட்டில் காணப்படும் எழுத்துக்கள் கல்வெட்டின் தொன்மையை உறுதி செய்கிறது. இங்கு சுமார் 653 ஆண்டுகளுக்கு முன்பே புனித செபஸ்தியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் இருந்தது என்பதை உறுதியாக கூறலாம்.

முதல் ஆலயம்

கி.பி. 1603-ல் இயேசு சபை குருக்களால் போர்ச்சுக்கீசியர் ஆதரவில் களி மண்ணால் ஆன முதல் ஆலயம் நாகர்கோவிலில் உள்ள கோட்டாருக்கு அடுத்தபடியாக மாடத்தட்டுவிளையில் அமைக்கப்பட்டது. அன்று முதல் மாடத்தட்டுவிளை கோட்டாறு பங்கின்கீழ், கொல்லம் இயேசு சபை கல்லூரியின் கண்காணிப்பில் செயல்பட தொடங்கியது.

கோட்டாறு பங்கில் அடங்கியுள்ள கிளை பங்குகள் பற்றிய புள்ளிவிவரத்தை கி.பி.1644-ல் ரோம் இயேசு சபை அதிபருக்கு அருட்தந்தை அந்திரேயாஸ் லோப்பன் அனுப்பி உள்ளார். அதில் மாடத்தட்டுவிளை மலைப்பகுதியில் உள்ளது என்றும், பாதுகாவலர் புனித செபஸ்தியார் என்றும், அப்போது 350 கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர் என்றும் புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது. வராப்புழை மறை மாவட்டத்தில் இருந்து கொல்லம் தனி மறை மாவட்டமாக செயல்பட தொடங்கியதும், மாடத்தட்டுவிளை கோட்டாறு பங்கில் இருந்து கி.பி.1853-ம் ஆண்டு மார்ச் 15-ந்தேதி முதல் காரங்காடு பங்கின் கிளை பங்கானது.

புனித செபஸ்தியார்

பின்னர் கி.பி.1918-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதி காரங்காட்டில் இருந்து பிரிந்து மாடத்தட்டுவிளை தனி பங்கானது. இந்த ஆலயத்தின் உள் அமைந்திருக்கும் புனித செபஸ்தியார் திருவுருவச்சிலை ரோமாபுரியில் இருந்து கொண்டு வரப்பட்டது ஆகும். இந்த சிலை உலகம் முழுவதும் காணப்படும் பொதுவான தோற்றத்தில் இருந்து வேறுபட்டு இடது கை மார்பிலும், வலது கை உடலோடு ஒட்டிய நிலையிலும் அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும்.

கி.பி.1923-ம் ஆண்டு ஜனவரி 2-ந்தேதி புனித செபஸ்தியாரின் உடலில் இருந்து எலும்பின் சிறிய பகுதியை அருளிக்கமாக கொல்லம் ஆயர் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகர் மாடத்தட்டுவிளை ஆலயத்துக்கு வழங்கி, பக்தர்களின் வழிபாட்டுக்கு வைக்க உத்தரவிட்டார். அன்றுமுதல் ஒவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியாரின் திருநாளான 9-ம் திருவிழாவின் போதும் பக்தர்களின் பார்வைக்கும், வழிபாட்டுக்கும் ஆலயத்தில் வைக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித செபஸ்தியாரின் திருப்பண்டத்தை முத்தமிட்டு புனிதரின் ஆசி பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News