ஆன்மிகம்
மயிலாடுதுறை அந்தோணியார் ஆலயத்தில் தேர்பவனி நடந்த போது எடுத்த படம்.

மயிலாடுதுறையில் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா

Published On 2021-01-18 04:57 GMT   |   Update On 2021-01-18 04:57 GMT
மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் நடந்த தேர் பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அந்தோணியார் ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி மற்றும் சிறப்பு திருப்பலி நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூர் மறைமாவட்ட முதன்மைகுரு ஞானபிரகாசம் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. ஆலய பங்குத்தந்தை பிரிட்டோ அடிகளார் திருவிழா தொடக்க உரையாற்றி வரவேற்றார்.

ஆத்துக்குடி பங்குத்தந்தை ஆரோக்கியசாமி அடிகளார், மயிலாடுதுறை உதவி பங்குத்தந்தை கஸ்மீர்ராஜ் அடிகளார் இணைந்து நிறைவேற்றிய திருப்பலியில் தஞ்சை நடுவண் இடைநிலை கல்வி வாரிய நிர்வாகி ஜார்ஜ் அடிகளார் சிறப்புரையாற்றினார். திருப்பலியில், உலகையே அச்சுறுத்தி வரும் நோய்த்தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும், உலக அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திடவும், மக்களின் வாழ்வாதாரம் காக்கப்படவும் சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றன.

தொடர்ந்து ஆலய வளாகத்தில் தேர் பவனி நடைபெற்றது. பங்குதந்தை பிரிட்டோ அடிகளார் தேர்களை புனிதம் செய்தார். புனித மைக்கேல் சம்மனசு, மாதா, அந்தோணியார் உருவம் தாங்கிய மூன்று தேர்கள் ஆலய வளாகத்தை சுற்றி பவனி வந்தது. இதில், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், பாடகற்குழுவினர், பலிபீட சிறுவர்கள் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

கொடியேற்றத்துடன் தொடங்கிய 10 நாளான நேற்று ஆண்டு திருவிழாவில், தினசரி நவநாள் ஜெபம், மன்றாட்டு மாலை, திருப்பலி உள்ளிட்ட மறைநிகழ்வுகளை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்குத்தந்தை பிரிட்டோ அடிகளார் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News