ஆன்மிகம்
கோணான்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலய பெருவிழா
விருத்தாசலம் அடுத்த கோணான்குப்பம் கிராமத்தில் புனித பெரிய நாயகி அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விருத்தாசலம் அடுத்த கோணான்குப்பம் கிராமத்தில் புனித பெரிய நாயகி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆண்டு பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான பெருவிழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சேலம் மறை மாவட்ட முன்னாள் மேதகு ஆயர் சிங்கராயர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தொடர்ந்து வாணவேடிக்கையுடன் ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் புனித பெரியநாயகி அன்னை ஓவியம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா பாலதண்டாயுதம், ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி மோகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், விருத்தாசலம் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் மற்றும் மங்கலம்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய விழாவான தேர் பவனி, வருகிற 23-ந்தேதி இரவு 9 மணியளவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் அருட்பணி தேவ சகாயராஜ் மற்றும் திருத்தலத்தின் உதவி பங்குத்தந்தை அருட்பணி அலெக்ஸ் ஒளில் குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.