ஆன்மிகம்
தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் 2 தங்கத்தேர் பவனி
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழாவின் நிறைவு நாளில் மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்ச்சை செலுத்தினர்.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெற்றன. திருவிழாவின் நிறைவு நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர் திருப்பலி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கினார். காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி நடந்தது. மறைமாவட்ட நிதி காப்பாளர் அலாய்சியஸ் பென்சிகர் தலைமை தாங்கினார். மறைமாவட்ட அனைத்து பள்ளிகளின் கண்காணிப்பாளர் பெலிக்ஸ் அலெக்சாண்டர் அருள் உரையாற்றினார். 8 மணிக்கு ஆங்கில திருப்பலி, 10 மணிக்கு மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்ச்சை செலுத்தினர். தொடர்ந்து, 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்டனி அல்காந்தர், இணை பங்குதந்தையர்கள் லெனின், சுரேஷ், சிபு, பங்குப்பேரவை துணைத்தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்லவராயர், துணை செயலாளர் தினகரன், பொருளாளர் ஆன்றின் செல்வகுமார் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.