ஆன்மிகம்
9-ம் நாள் திருவிழா: கோட்டார் சவேரியார் தேர்கள் பவனி மற்றும் ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி
சவேரியார் பேராலயத்தின் 9-ம் நாள் திருவிழாவையொட்டி 4 தேர்களும் ஆலய வளாகத்தில் வலம் வந்தன. ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி நடந்தது.
நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் திருப்பலி மற்றும் ஆடம்பரக்கூட்டு திருப்பலி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் முதல் நாள் தேர்பவனி, கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளுக்குட்பட்டு ஆலய வளாகத்திற்குள் இரவு 9 மணிக்கு நடந்தது. 9-ம் நாள் விழாவான நேற்று அதிகாலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை திருப்பலி நடைபெற்றது. பின்னர் மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் மாலை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர் நடந்தது.
இதில் கோட்டார் மறை மாவட்ட முதன்மை பணியாளர் கிலேரியஸ், செயலாளர் இமானுவேல், பொருளாளர் அலோசியஸ் பென்சிகர், மறைமாவட்ட குருக்கள், பங்குதந்தை ஸ்டான்லி சகாய சீலன் மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேள தாளம் முழங்க தேர்பவனி தொடங்கியது.
முதலில் காவல் சம்மனசு, செபஸ்தியார் மற்றும் சவேரியார் தேர், மாதா தேர் என 4 தேர்கள் சவேரியார் ஆலய வளாகத்திற்குள் வலம் வந்தன.
10-ம் நாள் திருவிழாவான இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு மலையாள திருப்பலி, 11 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. இரவு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறும். 10-ம் நாள் திருவிழாவையொட்டி இன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.