ஆன்மிகம்
மணப்பாடு திருச்சிலுவை ஆலய மகிமை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.

மணப்பாடு திருச்சிலுவை ஆலய மகிமை திருவிழா கொடியேற்றம்

Published On 2019-09-05 03:29 GMT   |   Update On 2019-09-05 03:29 GMT
மணப்பாடு திருச்சிலுவை ஆலய மகிமை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் மணப்பாடு திருச்சிலுவை ஆலயமும் ஒன்றாகும். கடலோரத்தில் இயற்கையாக அமைந்த மணல் குன்றின் மீது அமைந்துள்ள இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆலயத்தில் 440-ம் ஆண்டு மகிமை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலையில் பங்கு ஆலயத்தில் முதல் திருப்பலி நடந்தது. காலையில் திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலி, மெய்யான திருச்சிலுவை ஆசீரை தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் சகாயம் பெர்னாந்து, ஆலய கொடிமரத்தில் கொடியேற்றினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் நிறைவு நாளான 14-ந் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு தமிழிலும், 5 மணிக்கு மலையாளத்திலும் திருப்பலி நடக்கிறது. காலை 6 மணிக்கு ஆலயத்தைச் சுற்றிலும் ஐந்து திருக்காய சபையினரின் பவனியை தொடர்ந்து திருவிழா திருப்பலி நடக்கின்றது. மாலை 4.30 மணிக்கு நற்கருணை ஆசீர், மெய்யான திருச்சிலுவை ஆசீரை தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெறுகிறது. 
Tags:    

Similar News