ஆன்மிகம்
சிலுவை

பிறரது குற்றங்களை மன்னிப்போம்

Published On 2019-07-10 09:26 IST   |   Update On 2019-07-10 09:26:00 IST
குற்றங்களை மன்னித்தால் நம் உறவுகள் ஏராளமாக தொடர்ந்து மலரும். அளவுக்கு அதிகமாக நன்மைகள் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெறும். இது பலருக்கு வழிகாட்டுதலாகவும் இருக்கும்.
இன்றைய உலகில் உறவுகள் போலியாக மாறிக்கொண்டே இருக்கின்றன. இயற்கையாக இயல்பாக இருக்க வேண்டிய உறவுகள், செல்பி கலாசாரத்தால் செயற்கையாகி விட்டது. உணர்வுகள் இல்லாத உலகத்தில் வாழ்கிறோமோ என்ற எண்ணம் தலைதூக்கி நிற்கிறது. நமது சிரிப்பு, உணர்வு, உணர்ச்சி போன்ற அனைத்திலும் போலித்தனம் புகுந்து விட்டது. முரண்பாடுகளை நோக்கியே மனிதன் பயணம் செய்கிறான். உறவு என்பது இன்று வெறும் எண்ணிக்கையாகி விட்டது. எல்லாவற்றிலும் சுயநலமே முன்னுக்கு நிறுத்தப்படுகிறது. உறவு என்பது குறுகிய எல்லைகளுக்குள் சுருங்கி போய்விட்டது.

உறவுகளை சரி செய்வதற்கு இதுவே உகந்த காலம் என்பதை உணர்ந்திடுவோம். எவ்வளவுதான் கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதைத்து கொண்டிருந்தாலும், குற்றங்களும், குற்றாவாளிகளும் அதிகரித்து கொண்டே இருக்கின்றார்கள். குற்றம் புரிந்தால் வாழலாம் என்ற குறுகிய மனப்பான்மையில் இருந்து மனிதர்கள் விடுபட வேண்டும். ஒவ்வொரு குற்றமும் உலகில் இன்னொரு மனிதரின் உரிமையை உயிரை பறிக்கும் செயல்கள் என்பதை குழந்தை பருவத்தில் இருந்தே கற்றுக்கொடுப்போம்.

வெறும் தனிமனித பாவங்களை மட்டுமல்ல, சமுக பாவங்களைல் இருந்து விடுதலை பெற கடுமையாக உழைப்போம். இலக்குகளை வழுத்துக்கொண்டு உறவுகளை திட்டமிடுவோம். உயரிய லட்சியத்தை அடைவதற்கு ஒவ்வொரு நாளும் உழைத்து முன்னேறிக்கொண்டு இருப்போம். நம் முன்னோர் கட்டிக்காத்த தமிழர் மரபுகளில் உண்மையான உறவுகள் ஏராளம் இருந்தன. இதனை மீண்டும் நிலை நிறுத்துவதற்கு கடினமாய் உழைத்திடுவோம். எந்திரங்களை அல்ல, இதயங்களை வலுவாக்குவோம். நமக்கு எதிராக தவறுகள் செய்தவர்களை மன்னிப்போம். பிறருடைய குற்றங்களை மன்னிக்கும் போது பல நேரங்களில் அவர்களை மறக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த மனிதர்களை நினைக்கும் போது புன்முறுவல் செய்ய பழகுவோம். அப்போது நமது முகத்தில், அகத்தில் உள்ள வலிகள் அனைத்தும் மறைந்து போகும்.

குற்றங்களை மன்னித்தால் நம் உறவுகள் ஏராளமாக தொடர்ந்து மலரும். அளவுக்கு அதிகமாக நன்மைகள் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெறும். இது பலருக்கு வழிகாட்டுதலாகவும் இருக்கும்.

அருட்பணியாளர் குருசு கார்மல்,
கோட்டார் மறைமாவட்டம்.

Similar News