ஆன்மிகம்
உத்தரியமாதா திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.

வேளாங்கண்ணி பேராலயத்தில் உத்தரியமாதா திருவிழா தொடங்கியது

Published On 2019-07-08 04:16 GMT   |   Update On 2019-07-08 04:16 GMT
வேளாங்கண்ணி பேராலயத்தில் உத்தரியமாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாக விளங்குகிறது. கீழை நாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படும் இந்த பேராலயம் கிறிஸ்தவ ஆலய கட்டிடக்கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய பசிலிக்கா என்ற பெருமைமிகு பிரமாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 பேராலயங்களில் ஒன்றாக திகழ்கிறது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுதோறும் மராட்டிய மாநில மீனவர்கள் சார்பில் உத்தரியமாதாவுக்கு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக பேராலயத்தில் அதிபர் பிரபாகர் தலைமையில் மராட்டிய மொழியில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பேராலய பங்குதந்தை சூசை மாணிக்கம் கொடியை புனிதம் செய்து கொடி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பேராலயத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கடைத்தெரு, கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது. பின்னர் பேராலயம் முன் திரண்டிருந்த திரளான பக்தர்கள் வெள்ளத்தில் கொடியேற்றப்பட்டது.

இதில் பேராலய பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தை டேவிட்தன்ராஜ், அருட்சகோதரிகள் உள்பட மும்பை, விசாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி வருகிற 15-ந் தேதி(திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
Tags:    

Similar News