ஆன்மிகம்
ரோமாபுரியில் புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.

ரோமாபுரி புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி

Published On 2019-06-20 04:17 GMT   |   Update On 2019-06-20 04:17 GMT
ரோமாபுரியில் புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
நெய்வேலி அருகே உள்ள ரோமாபுரியில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான பெருவிழா கடந்த 16-ந் தேதி மாலை 6 மணிக்கு அருட்தந்தைகள் தேனிமலை லாசர் சவரிமுத்து, நெய்வேலி நிர்மல்ராஜ், பெரியாக்குறிச்சி லாரன்ஸ் ஆகியோர் முன்னிலையில் கூனங்குறிச்சி பெரியநாயகி அன்னை மாதா ஆலய பங்கு தந்தை கிறிஸ்துராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து தினசரி காலை, மாலை நேரத்தில் கூட்டு திருப்பலியும், சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்று வந்தது. இரவில் சிறிய வகை தேரில் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டு, பவனி நடந்து வந்தது.

17-ந்தேதி மாலை 6 மணிக்கு அருட்தந்தைகள் நிர்மல்ராஜ், சைமன் அந்தோணிராஜ் ஆகியோர் தலைமையில் நவநாள் திருப்பலியும், ஆராதனையும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அன்று மாலை 6 மணிக்கு பங்கு தந்தைகள் கூனங்குறிச்சி கிறிஸ்துராஜ், பெரியாக்குறிச்சி லாரன்ஸ், போபால் அருட்தந்தை சுவாமிநாதன் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

பின்னர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்டது. இதையடுத்து ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. பவனியானது ரோமாபுரியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தது.

இதில் நெய்வேலி, விருத்தாசலம், டவுன்ஷிப், வடலூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை கிறிஸ்துராஜ், வேதியர் தேவராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News