ஆன்மிகம்
தூத்துக்குடியில் பனிமய மாதா திருவுருவ சப்பர பவனி நடந்ததையும், கூடியிருந்த திரளான மக்களையும் படத்தில் காணலாம்.

பனிமய மாதா ஆலய சப்பர பவனி - பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

Published On 2018-08-06 03:56 GMT   |   Update On 2018-08-06 03:56 GMT
தூத்துக்குடி திருமந்திர நகர் பனிமய மாதா ஆலய சப்பர பவனி நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
ஏழுகடல் துறையுடன் எல்லோருக்கும் ஏக அடைக்கலத்தாயாக எழுந்தருளி அன்போடு ஆட்சி புரியும் தூத்துக்குடி திருமந்திர நகர் பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பனிமயமாதா ஆலயத்தின் 436-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர், அருளிக்க ஆசீர் நடந்தது. பல்வேறு தரப்பினருக்குமான சிறப்பு திருப்பலிகள், மறையுரைகள் நடத்தப்பட்டன. கடந்த 29-ந் தேதி புதுநன்மை, நற்கருணை பவனியும், நேற்று முன்தினம் பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று அன்னையின் சப்பர பவனி நடந்தது. விழாவையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30 மணிக்கு கோட்டாறு பிஷப் நசரேன் சூசை தலைமையில் 2-ம் திருப்பலியும் நடந்தது. காலை 7.30 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா திருப்பலி நடந்தது. 10 மணிக்கு தூத்துக்குடி மறைவட்ட முதன்மை குரு ரோலிங்டன் தலைமையில் திருப்பலி நடந்தது. மதியம் 12 மணிக்கு திருச்சி பிஷப் அந்தோணி டிவோட்டா தலைமையில் நன்றி திருப்பலி நடந்தது. மாலை 3 மணிக்கு ஜெபமாலை, அருளிக்க ஆசீர் நடந்தது.

இதைத்தொடர்ந்து நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியையொட்டி ஆலயத்தை சுற்றிலும் திரண்டு இருந்த மக்கள் அன்னையின் சப்பரத்தை தூக்கி வந்தனர். அப்போது கூடியிருந்த திரளான மக்கள் ‘மரியே வாழ்க’ என்று கோஷம் எழுப்பினர். பவனி வந்த அன்னையை வரவேற்கும் வகையில் இருபுறமும் கட்டிடங்களில் பூக்களை தூவியும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாக பிரார்த்தனை செய்தனர். அன்னையின் சப்பரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது. சாதி, மத பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு செய்தனர். சப்பரம் கோவிலின் பின்புறமாக பெரியகடை தெரு, கிரேட் காட்டன் ரோடு, பீச் ரோடு வழியாக ஆலய வளாகத்தை வந்தடைந்தது.

பனிமயமாதா ஆலய சப்பர பவனியையொட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வெளிமாவட்ட போலீசார் உள்பட 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக ஏராளமான போலீசார் சாதாரண உடையில் பணியில் ஈடுபட்டனர்.

விழாவையொட்டி தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஆலயத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவில் ஆலய பங்குதந்தை லெரின் டிரோஸ் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பனிமயமாதாவை வழிபட்டனர்.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு ஆலய உபகாரிகள் மற்றும் திருவிழா நன்கொடையாளர்களுக்கான முதல் திருப்பலி நடக்கிறது. காலை 6.30 மணிக்கு 2-ம் திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நடக்கிறது. 
Tags:    

Similar News