ஆன்மிகம்
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற புனித வெள்ளி திருப்பலியில் கலந்து கொண்ட பக்தர்களை காணலாம்.

வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி

Published On 2018-03-31 08:50 IST   |   Update On 2018-03-31 08:50:00 IST
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற புனித வெள்ளி சிறப்பு திருப்பலியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் தவக்காலத்தின் இறுதி வாரம் கடந்த 25-ந் தேதி குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பெரிய வியாழன் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி முதல் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நடைபெற்றது.

கிறிஸ்தவர்களின் இறைவனான ஏசு, எருசலேமில் பிறந்தார். பின்னர் ஏசு அந்த அரசினால் கொல்கதா மலையில் சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஏசு சிலுவையில் அறையப்பட்டு இறந்த புனித வெள்ளிக்கிழமை துக்க நாளாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நேற்று புனித வெள்ளியையொட்டி பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புனித வெள்ளியையொட்டி நேற்று மாலை பேராலயத்தின் அருகே உள்ள கலையரங்கத்தில் சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் சிலை வைக்கப்பட்டு இருந்தது. கலையரங்கத்தில் இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுக்கள் நடைபெற்றன. அதைதொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேராலய அதிபர் பிரபாகர் மற்றும் பங்கு தந்தைகள் சிலுவையில் உள்ள ஏசுவின் பாதத்திற்கு முத்தமிட்டனர். அதனைத்தொடர்ந்து ஏசுவின் சிலை பேராலயத்தை சுற்றி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது பேராலயத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏசு சிலையின் பாதத்தில் முத்தமிட்டனர். பின்னர் ஏசுவின் உடல் சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு பேராலய கீழ் கோவிலுக்கு பவனியாக எடுத்து செல்லப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News