ஆன்மிகம்

தவக்கால சிந்தனை: மனதுருகும் இயேசு

Published On 2018-03-21 09:00 IST   |   Update On 2018-03-21 09:00:00 IST
எந்த சூழ்நிலையாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்திருக்கும் இயேசுவையே நோக்கிப் பாருங்கள். இன்று உங்கள் அவசியம் என்னவென்று நமது ஆண்டவர் அறிவார்.
நாயீன் ஊருக்குள் இயேசு போனார். திரளான மக்களும், சீடர்களும் அவருடன் சென்றார்கள். “அவர் ஊரின் வாசலுக்குச் சென்ற போது, மரித்துப்போன ஒருவனை அடக்கம் செய்ய கொண்டு வந்தார்கள். அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடன் வந்தார்கள் (லூக்கா:7:12). இந்த வசனங்களில் இரண்டு விதமான திரள் கூட்டத்தை பார்க்க முடிகின்றது. ஒரு கூட்ட மக்கள் இயேசுவோடு வருகின்றார்கள். மற்றொரு கூட்ட மக்கள் தன் மகனை பறிகொடுத்த விதவை தாயோடு வருகின்றார்கள்.

இயேசு செய்யும் அற்புதங்களை பார்த்திட, அவரோடு திரளான மக்கள் நடந்து வந்திருப்பார்கள். மரித்த வாலிபரை அடக்கம் செய்திட விதவை தாயோடு திரளான மக்கள் நடந்து வந்திருப்பார்கள். இப்படிப்பட்ட இரண்டு விதமான திரள் கூட்ட மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இயேசு கிறிஸ்து முயற்சி செய்யாமல், நம்பிக்கை இழந்த நிலையில், கண்ணீரோடு காணப்படும் தாயை தேற்றுவதையே மேன்மையாக கருதியுள்ளார். ஏனென்றால் அந்த தாயின் நிலை மிகவும் மோசமாயிருந்தது. அவளுடைய கணவனும் மரித்துப்போனான்; இப்போது அவளுடைய வாழ்வுக்கு ஒரே நம்பிக்கையாக இருந்த மகனும் இறந்து போனான்.

இயேசு, அந்த தாயை பார்த்து அழாதே என்றார். இயேசுவிடம் யாரும் அந்த மரித்துப்போன மகனை எழுப்பும்படி கேட்கவில்லை. மனதுருகிய இயேசு, அவராகவே சென்று இறந்தவனின் உடலை தொட்டார். மரித்தவன் எழுந்து உட்கார்ந்து பேச தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்படைத்தார். (லூக்கா: 7: 12-15.)

பிரியமானவர்களே, எந்த சூழ்நிலையாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்திருக்கும் இயேசுவையே நோக்கிப் பாருங்கள். இன்று உங்கள் அவசியம் என்னவென்று நமது ஆண்டவர் அறிவார். உங்கள் கண்ணீரை காண்கிற இயேசு அழாதே என்கிறார்.

Similar News