ஆன்மிகம்

கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி 25-ந்தேதி நடக்கிறது

Published On 2018-03-20 09:14 IST   |   Update On 2018-03-20 09:14:00 IST
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான குருத்தோலை பவனி வருகிற 25-ந் தேதி நடைபெறுகிறது.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை வருகிற 1-ந் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த மாதம் (பிப்ரவரி) 14-ந் தேதி முதல் 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வருகிற 25-ந் தேதி குருத்தோலை திருநாள் கொண்டாடப்படுகிறது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவரை ஒரு கழுதைக்குட்டியின் மேல் அமர்த்தி எருசலேம் நகரின் வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது, வழி நெடுக நின்ற மக்கள் ஒலிவ மரக்கிளைகளை கைகளில் பிடித்தபடி ‘தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, உன்னதங்களில் ஓசன்னா’ என்று பாடி மகிழ்ந்தனர்.



இந்த நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை திருநாள் கொண்டாடுகின்றனர். இந்த திருநாள் ஆண்டுதோறும் ஞாயிற்றுக்கிழமை வருவதால், அந்த நாள் குருத்தோலை ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது.

அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்தவர்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட குருத்தோலைகள் வழங்கப்படும். அவர்கள் அவற்றை கைகளில் ஏந்தியபடி அந்தந்த ஊர்களில் தெருக்களின் வழியாக ஓசன்னா பாடல் பாடி பவனியாக வருவார்கள். அதைத்தொடர்ந்து திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

குருத்தோலை பவனிக்கான குருத்தோலைகளை, முந்தைய நாள் மக்கள் நேர்ச்சையாகவும், காணிக்கையாகவும் ஆலயங்களுக்கு வழங்குவார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் வருகிற 25-ந் தேதி குருத்தோலை பவனி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, ஈஸ்டர் வரை உள்ள நாட்கள் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

Similar News