ஆன்மிகம்

தவக்கால சிந்தனைகள்: தவம் அக வலிமையை அதிகப்படுத்தும்

Published On 2018-03-07 07:50 IST   |   Update On 2018-03-07 07:50:00 IST
உண்ணா நோன்பைவிட இத்தகைய தவங்கள் நமது அகவலிமையை அதிகப்படுத்தி, நம்மை சிறந்த பண்பாளர்களாக மாற்றும் என்பது உறுதி.
பிறப்பு, இறப்பு என்கிற சக்கர சுழற்சியிலிருந்து விடுபடவே மனிதர்கள் விரும்புகின்றனர். எப்பாடுபட்டாவது சொர்க்கத்திற்குள் நுழைந்து விட வேண்டும் என்பதே மனிதப்பிறவி எடுத்த ஒவ்வொருவரின் அசைக்க முடியாத விருப்பம். அந்த விருப்பத்தினால் தான், அனைத்து மதங்களிலும் நோன்பு காலம் என்கிற தயாரிப்பு நாட்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதுவே சொர்க்கத்தின் நுழைவு சீட்டை பெற தன்னை தகுதியாக்கும் காலம் ஆகும். நோன்பு, தவம், புலனடக்கம், பிரார்த்தனை என அனைத்து மதத்தவரும் தம்மை தகுதியாக்கி, பாவத்திலிருந்து விடுபடும் கருவியாக தவ நாட்களை பயன்படுத்தி கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் உயர்ந்த தலைவர் போப் பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, காயப்படுத்தும் வார்த்தைகளை தவிர்த்து கனிவான வார்த்தைகளை பேசுவதும், கோபத்தை தவிர்த்து பொறுமையை கடைபிடிப்பதும், சுயநலத்தை தவிர்த்து பிறரன்புக்கு முக்கியத்துவம் தருவதும், குறை சொல்வதை தவிர்த்து இருப்பதில் நிறைவடைந்து நன்றியுணர்வோடு இருப்பதும் நன்று.

அதேபோல், வஞ்சகம், பழிவாங்குவதை தவிர்த்து மன்னிப்பதும், நல்லுணர்வை வளர்ப்பதும், பிறரைப்பற்றி இகழ்ந்து பேசுவதை தவிர்த்து அவர்களின் நற்செயல்களை பாராட்டுவதும், கவலைப்படுவதை தவிர்த்து கடவுளின் மீது நம்பிக்கை வைப்பதும் அர்த்தமுள்ள தவமுயற்சிகளாகும்.

உண்ணா நோன்பைவிட இத்தகைய தவங்கள் நமது அகவலிமையை அதிகப்படுத்தி, நம்மை சிறந்த பண்பாளர்களாக மாற்றும் என்பது உறுதி. தவிர்க்க வேண்டியதை தவிர்த்து, மாற்ற வேண்டியதை மாற்றுவதே தவக்காலத்தின் நோக்கமாகும். எனவே தவக்காலத்தில் அகவலிமையை அதிகரிக்கும் தவமுயற்சிகளில் நம்மை ஐக்கியப்படுத்திக்கொள்வோம்.

அருட்சகோதரி. செலஸ்டினா, மரியின் ஊழியர் சபை,

வளனகம், திண்டுக்கல்.

Similar News