கிறித்தவம்
மேலப்புதூரில் உள்ள ஒரு கடையில் ஸ்டார்கள் விற்பனைக்காக தொங்க விடப்பட்டுள்ள காட்சி.

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட தேவாலயங்களில் ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2021-12-04 04:10 GMT   |   Update On 2021-12-04 04:10 GMT
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. ஸ்டார்கள் விற்பனை தீவிரம் அடைந்துள்ளது.
ஏசு கிறிஸ்துவின் பிறப்பு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெறும். திருச்சி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். இதையொட்டி கிறிஸ்தவர்களின் வீடுகளிலும், ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பர்.

ஏசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுப்படுத்தும் வகையில் இந்த குடிலில் காட்சிப்படுத்தப்படும். அதே போல கிறிஸ்துமஸ் மரம் அமைத்து அதை மின் விளக்குகளால் அலங்கரிப்பார்கள். கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை மற்றும் பரிசு பொருட்கள், பலூன்களை கிறிஸ்துமஸ் மரத்தில் கட்டி தொங்க விடுவார்கள். டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கும்.

கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்ததால் எளிமையான முறையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடந்தன. இந்த ஆண்டு மிகவும் உற்சாகத்துடன் கொண்டாட ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. இதற்காக இப்போதே வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில், மரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

மேலும் இயேசு பிறந்த இடத்தை வால் நட்சத்திரம் அடையாளம் காட்டியது. அதை குறிக்கும் வகையில் வீடுகளில் ஸ்டார்கள் தொங்க விடப்படும். இதையொட்டி மாவட்டம் முழுவதும் பல்வேறு கடைகளில் பல விதமான வண்ணங்களில், வடிவங்களில் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

திருச்சி மேலப்புதூர், சிங்காரத்தோப்பு, தெப்பக்குளம், கடைவீதி உள்பட பல்வேறு இடங்களில் பலவிதமான ஸ்டார்கள் மும்முரமாக விற்பனையாகிறது. மேலும் இன்று (புதன்கிழமை) முதல் கிறிஸ்துமஸ் தாத்தா பவனி தொடங்க உள்ளது. இனிமையான பாடல்களை பாடியபடி வீடுகள் தோறும் சென்று கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு வழங்கி வாழ்த்துக்கள் கூறுவார்கள்.

கிறிஸ்தவ ஆலயங்களும் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. பல கிறிஸ்தவ ஆலயங்களின் கட்டிடங்கள் வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும், ஏராளமான ஸ்டார்களால் தோரணங்கள் தொங்க விடப்படுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News