ஆன்மிகம்
சிறப்பு திருப்பலி நடந்ததையும், அதில் திரளாக கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றதையும் படத்தில் காணலாம்.

அந்தோணியார் ஆலய திருவிழா திருப்பலி

Published On 2018-02-07 09:05 IST   |   Update On 2018-02-07 09:05:00 IST
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தென்னகத்து பதுவை என அழைக்கப்படும் புளியம்பட்டி அந்தோணியார் ஆலய திருவிழா திருப்பலி நடந்தது.
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தென்னகத்து பதுவை என அழைக்கப்படும் புளியம்பட்டி புனித அந்தோனியார் ஆலய திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை, மதியம், மாலை நேரங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. கடந்த 30-ந் தேதி பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் ஜூடு பால்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

நேற்று முன்தினம் காலையில் திருப்பலி நடந்தது. மாலை 6 மணிக்கு அன்னை மரியாவின் திருச்செபமாலை நடந்தது. 6.30 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட முதன்மை குரு சேவியர் டெரன்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி, மறையுரை மற்றும் நற்கருணை ஆசீரும் நடந்தது. இரவு 8.30 மணிக்கு புதுமைக்கிணறு வளாகத்தில் அலங்காரம் செய்யப்பட்ட புதுமை புனித அந்தோனியார் சொரூபம் மந்திரிக்கப்பட்டு அந்தோனியார் சப்பர பவனி நடந்தது. அப்போது பக்தர்கள் நேமிசமாக உப்பு மிளகு ஆகியவற்றை சப்பரத்தின் மீது போட்டு வழிப்பட்டனர்.

பக்தர்கள் நேமிசமாக குழந்தைகளை விற்று, மீண்டும் விலை கொடுத்து வாங்கினர். நேற்று அதிகாலையில் கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, கேரளா மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை புளியம்பட்டி பங்கு தந்தை மரியபிரான்ஸ், உதவி பங்கு தந்தைகள் மிக்கேல், ஜேக்கப் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.

Similar News