கிரிக்கெட்

உலக கோப்பையை இந்தியா வெல்வது கடினம்- வாசிம் அக்ரம் கருத்து

Published On 2023-08-03 12:15 GMT   |   Update On 2023-08-03 12:16 GMT
  • சொந்த மண்ணில் விளையாடுவது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
  • 2011-ல் இந்தியா வென்றது. ஆனால் அதன் காரணமாகவே அவர்களுக்கு மற்ற அணிகளை காட்டிலும் எப்போதுமே அதிகப்படியான அழுத்தம் இருக்கும்.

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி திவிரம் காட்டி உள்ளது. ஏனெனில் இந்தியா 2013-க்குப்பின் தொடர்ந்து 10 வருடங்களாக ஐசிசி கோப்பைகளை வாங்க முடியாமல் இந்தியா திணறி வருகிறது. அதனால் இம்முறை சொந்த மண்ணில் அந்த தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து கோப்பையை வென்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா களமிறங்க உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இதர அணிகளை காட்டிலும் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவதால் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

நிச்சயமாக இந்தியாவுக்கு வெற்றிக்கான வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக மிகவும் கவரும் வகையில் கனவில் வீசுவது போல அசத்தும் முகமது ஷமி அவர்களுக்கு பலத்தை சேர்க்கிறார். பும்ரா குணமடைந்து விளையாடுவது இந்தியாவுக்கு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அதுபோக அவர்களிடம் அஸ்வின், ஜடேஜா போன்ற நல்ல சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் இருக்கின்றனர்.

அதில் யார் விளையாடுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இந்திய அணியில் நிறைய நல்ல வீரர்கள் இருக்கின்றனர். ஆனாலும் சொந்த மண்ணில் விளையாடுவது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

2011-ல் இந்தியா வென்றது. ஆனால் அதன் காரணமாகவே அவர்களுக்கு மற்ற அணிகளை காட்டிலும் எப்போதுமே அதிகப்படியான அழுத்தம் இருக்கும். பாகிஸ்தானுக்கும் அதே நிலைமை தான். ஒருவேளை சொந்த மண்ணில் விளையாடினாலும் பாகிஸ்தான் மீதும் நிச்சயமாக அழுத்தம் இருக்கும்.

என்று கூறினார். 

Tags:    

Similar News