கிரிக்கெட்

ஜெயசூர்யா சுழலில் சிக்கிய ஆஸ்திரேலியா- இலங்கை இன்னிங்ஸ் வெற்றி

Published On 2022-07-11 11:54 GMT   |   Update On 2022-07-11 11:54 GMT
  • இலங்கை அணி தரப்பில் ஜெயசூர்யா 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
  • தொடர் நாயகன் விருது தினேஷ் சண்டிமாலுக்கு வழங்கப்பட்டது.

காலே:

ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் லபுசேன், ஸ்மித் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர்.

லபுசேன் சதமடித்து 104 ரன்னில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தினார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து இலங்கை அணி முதல் இன்னிங்சை ஆட தொடங்கியது. 2வது நாள் ஆட்ட நேர அந்த அணி முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. குசால் மெண்டிஸ் 84 ரன்களும் ,மேத்யூஸ் 6 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மெண்டிஸ் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். மேத்யூஸ் அரைசதம் கடந்த நிலையில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணி தரப்பில் சிறப்பாக விளையாடிய சண்டிமால் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் 3-வது நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 431 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியை விட இலங்கை அணி 67 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சண்டிமால் 118 ரன்களுடனும் ரமேஷ் மெண்டிஸ் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரமேஷ் மெண்டீஸ் 29 ரன்னிலும் தீக்‌ஷனா 10 ரன்னிலும் ஜெயசூர்யா 0 ரன்னிலும் வெளியேறினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சண்டிமால் இரட்டை சதம் விளாசினார். கடைசி விக்கெட்டாக ரஜிதா 0 ரன்னில் அவுட் ஆனார். சண்டிமால் 206 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 554 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணியை விட இலங்கை அணி 190 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. வார்னர் 24, கவாஜா 29, லபுசன் 32, ஸ்மித் 0, ஹெட் 5, கிரீன் 23, ஸ்டார்க் 0, கம்மின்ஸ் 16, நாதன் லயன் 5, ஸ்வெப்சன் 0 என வரிசைக்கட்டி வெளியேறினர். 151 ரன்கள் எடுப்பதற்க்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா அணி தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக லபுசன் 32 ரன்கள் எடுத்திருந்தார்.

இலங்கை அணி தரப்பில் ஜெயசூர்யா 6 விக்கெட்டுகளை அள்ளினார். சிறப்பாக பந்து வீசிய ஜெயசூர்யா ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். தொடர் நாயகன் விருது தினேஷ் சண்டிமாலுக்கு வழங்கப்பட்டது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இலங்கை அணி வருகிற 16-ந் தேதி பாகிஸ்தான் அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. 

Tags:    

Similar News