கிரிக்கெட்

பாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 2வது டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது

Published On 2024-04-21 06:23 GMT   |   Update On 2024-04-21 06:23 GMT
  • முதலில் ஆடிய நியூசிலாந்து 90 ரன்களில் ஆல் அவுட்டானது.
  • பாகிஸ்தானின் ஷஹீன் அப்ரிடி 3 விக்கெட் வீழ்த்தினார்.

ராவல்பிண்டி:

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி மழையால் ரத்துசெய்யப்பட்டது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. பாகிஸ்தான் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவில் விக்கெட்களை இழந்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 18.1 ஓவரில் 90 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பாகிஸ்தான் சார்பில் ஷகீன் அப்ரிடி 3 விக்கெட்டும், அமீர் , அப்ரார் அகமது, ஷதாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 91 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பொறுப்புடன் ஆடிய முகமது ரிஸ்வான் 45 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இறுதியில் பாகிஸ்தான் 12.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சார்பில் லிஸ்டர், பேர்ஸ்வெல், இஷ் சோதி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் 5 போட்டி கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது.

Tags:    

Similar News