சினிமா
கே.வி.ஆனந்த்

கொரோனா பாதிப்பு... கே.வி.ஆனந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாததால் கண்கலங்கிய குடும்பத்தினர்

Published On 2021-04-30 12:47 IST   |   Update On 2021-04-30 15:58:00 IST
கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவருடைய உடலை வீட்டிற்கு அனுப்பாமல், நேரடியாக மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். நள்ளிரவில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், இதனால் அவரே காரை ஓட்டிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அதிகாலை 3 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கே.வி.ஆனந்த் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக கே.வி.ஆனந்தின் மனைவி மற்றும் மகள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த 24-ம் தேதி அன்று இயக்குனர் கே.வி.ஆனந்துக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு கே.வி.ஆனந்த் உயிரிழந்துள்ளார்.



இயக்குனர் கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவருடைய உடலை வீட்டிற்கு அனுப்பாமல், நேரடியாக பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. ஆம்புலன்சில் ஒரு குளிர்சாதனப் பெட்டிக்குள் பாதுகாப்பு உடைகள் அணிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.

மின் மயானத்துக்கு செல்லும் வழியில் அவரது குடும்பத்தினர், அஞ்சலி செலுத்துவதற்காக, அவரது வீட்டின் வாசலில் ஆம்புலன்ஸ் சிறிது நேரம் நின்றது. அப்போது கே.வி.ஆனந்தின் மனைவி மற்றும் மகள்கள் ஆம்புலன்ஸின் கண்ணாடி வழியே அவரது உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர். பின்னர் சிறிது நேரத்தில் அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானம் கொண்டு செல்லப்பட்டது.

Similar News