சினிமா

விஷாலுக்கு எதிராக கூடிய தயாரிப்பாளர்கள் - தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு

Published On 2018-12-19 07:56 GMT   |   Update On 2018-12-19 07:56 GMT
பொதுக்குழுவை கூட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடிய தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #ProducersCouncil #Vishal #TFPC
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நடிகர் விஷால் இருந்து வருகிறார். தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு குழு அவருக்கு எதிராக இன்று சங்க வளாகத்தில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது.

நண்பகல் 12 மணியளவில் தயாரிப்பாளர்கள் டி.சிவா, கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்திஷ், எஸ்.வி.சேகர், உதயா, விடியல் சேகர் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க வளாகத்துக்கு வந்தனர்.

அங்கே கோ‌ஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். அவர்கள் வந்தபோது சங்கத் தலைவர் விஷால் அங்கு இல்லை. செயலாளர் கதிரேசன் இருந்தார். அவர் வெளியே வந்து போராடிய தயாரிப்பாளர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.

விஷாலுக்கு எதிராக திரண்டுள்ள தயாரிப்பாளர்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் வருமாறு:-

சங்கத் தலைவர் விஷால் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சுய லாபத்துடன் செயல்படுகிறார். இந்த ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டத்தை இன்னும் கூட்டவில்லை. பட வெளியீட்டை ஒழுங்குபடுத்துவதற்காக விஷால் அமைத்த குழு பாரபட்சமாக நடந்துகொள்வதால் பட வெளியீட்டில் சிக்கல் நிலவுகிறது.



கடந்த நிர்வாகம் சங்கத்துக்கு வைத்து சென்ற வைப்புத்தொகையில் மோசடி நடந்துள்ளது. பைரசியை ஒழிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்காக செலவு செய்யப்பட்ட தொகை என்ன ஆனது? கியூப் கட்டணத்தை குறைப்பதற்காக வேலைநிறுத்தம் நடத்தப்பட்டதில் எந்த பயனும் ஏற்படவில்லை. பதிலாக முன்பைவிட கட்டணம் அதிகமாகி உள்ளது.

காலியான பதவிகள் நிரப்பப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். ஆனால் டிசம்பர் மாதம் ஆகியும் பொதுக்குழு கூட்டப்படுவதற்கான அறிகுறியே தெரியவில்லை. உடனடியாக பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவே இல்லை’.

மேற்கண்ட பல கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்க அறைகளுக்கு பூட்டு போட்டனர். விஷால் உடனடியாக வரவேண்டும் என்று தொடர்ந்து போராடினார்கள். சங்கத்துக்கு பூட்டு போட்டு சாவியை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் கொடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. #ProducersCouncil #Vishal #TFPC

Tags:    

Similar News