சினிமா

தனுஷ் தனது மகன் என உரிமை கோரி தொடர்ந்த வழக்கு: மதுரை ஐகோர்ட்டு புதிய உத்தரவு

Published On 2017-02-28 11:41 IST   |   Update On 2017-02-28 11:41:00 IST
மகன் என உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக நடிகர் தனுஷ் இன்று மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார். அப்போது நீதிபதி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்..
மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன், எங்களுக்கு வயதாகி விட்டதால் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு பொய்யானது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடிகர் தனுஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இரு தரப்பினரிடமும் உள்ள நடிகர் தனுசின் பள்ளி மாற்று சான்றிதழ்களை தாக்கல் செய்யுமாறு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இருதரப்பினரும் சான்றிதழ்களை தாக்கல் செய்தனர். நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றிதழ்களில் அங்க மச்சம் அடையாளம் குறிப்பிடவில்லை என எதிர்தரப்பினர் வாதிட்டனர்.



இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் கடந்த 24-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் தனுசின் அங்க அடையாளம் காண இன்று (28-ந்தேதி) ஆஜராகுமாறு நடிகர் தனுசுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று காலை 9.45 மணி அளவில் நடிகர் தனுஷ் தனது வக்கீல்களுடன் மதுரை ஐகோர்ட்டு கிளைக்கு வந்தார். தனுசின் பெற்றோரான கஸ்தூரிராஜா, விஜயலட்சுமி ஆகியோரும் ஐகோர்ட்டுக்கு வந்திருந்தனர்.

பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி மேலூர் தம்பதி கூறிய தனுஷின் அங்க அடையாளங்களை சரிபார்த்து இன்று மாலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது. பதிவாளர் அறையில் தனுஷின் அங்க அடையாளங்களை சரிபார்க்கும்போது அரசு மருத்துவர் ஒருவர் உடன் இருக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை மார்ச் 2-ந் தேதி ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.

முன்னதாக நடிகர் தனுஷ் கோர்ட்டில் ஆஜராவதை யொட்டி அவரது ரசிகர்கள் கோர்ட்டு முன்பு திரண்டிருந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Similar News