சினிமா

இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணா சென்னையில் காலமானார்

Published On 2016-11-22 17:38 IST   |   Update On 2016-11-22 17:38:00 IST
இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணா இன்று சென்னையில் காலமானார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா இசை உலகைத் தன் கம்பீர குரல்வளத்தால் கட்டிப் போட்டு வைத்திருக்கும் மூத்த இசை அறிஞர். சென்னையில் தங்கியிருந்த பால முரளி கிருஷ்ணா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 86.

பால முரளியின் இயர் பெயர் முரளி கிருஷ்ணா. எட்டு வயதில் இவர் விஜயவாடாவில் நடந்த தியாகராஜ ஆராதனையில் பாடிய விதத்தை கண்டு ‘பால’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மங்களப்பள்ளி என்ற இடத்தில் 1930 ஆம் ஆண்டு பிறந்தவர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இசைத்தொண்டு புரிந்து வருகிறார். தாய் சூர்ய காந்தம்மாள், தந்தை பட்டாபி ராமய்யா. இருவருமே இசைக் கருவிகளை வாசிப்பதில் தேர்ந்தவர்கள். பாலமுரளி கிருஷ்ணா ஐந்து வயதிலேயே இசை ஆர்வம் காட்டினார்

ஐந்து வயதில் ராகத்தைக் கண்டுபிடிக்கும் ஞானமும், தாள லயமும், ஏழு வயதில் கச்சேரி செய்யும் அளவுக்கு வித்வமும் பாலமுரளிக்கு வாய்த்துவிட்டன. இவர் 15 வயதிற்குள் 72 மேள கர்த்தாக்களையும் ஆளும் திறமையும் அவற்றை பயன்படுத்தி கிருதிகளை உருவாக்கும் திறமையையும் பெற்றிருந்தார். இசை ஆர்வம் காரணமாகப் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டார்.

இசை குறித்த இவரது ஆய்வுகள் வாழ்நாள் சாதனையாகும். இசை வைத்தியத்தில் நம்பிக்கைக் கொண்டவர். அது குறித்து பல ஆராய்ச்சிகள் செய்தவர். தெலுங்கு, கன்னட, சம்ஸ்கிருத, மலையாள, பெங்காலி, பஞ்சாபி, ஹிந்தி மொழிகளில் பெரும் புலமை உடையவர்.

400-க்கும் மேற்பட்ட இசைத்தொகுப்புக்களை 72 மேளகர்த்தாக்களை கொண்டு உருவாக்கிய பெருமை இவருக்கே உரியதாகும். பல புதிய ராகங்களைக் கண்டுபிடித்து சாதனை படைத்தவர். சந்த ஒலிகளைக் கோர்வையாக்கித் தாளச் சங்கிலியில் கதி பேதத்தைக் கொண்டு வந்து, புதிய தாள முறைகளை உருவாக்கிய பெருமை உடையவர்.

தில்லானாக்களில் சங்கதிகளைப் புகுத்தி புதுமை செய்தவர். இப்படிப் பல சாதனைகளை செய்திருந்தாலும் கூட இவரது புதிய முயற்சிகள் கடுமையாக விமர்சிக்கபட்டுள்ளன. முதன் முதலாக 72 மேளகர்த்தாக்களில் முதல் ராகமான கனகாங்கி ராகத்தில் கீர்த்தனையைத் தொடங்கி புதுப்புது கீர்த்தனைகளைப் பாடி, இசைக்கல்லூரியின் முதல்வராகி, சென்னைக்கு வந்து இசைமேதையாகி, சரஸ்வதி கடாட்சத்துடன் இசையுலகின் உயரிய விருதுகள் அனைத்தும் பெற்று சங்கீத சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக திகழ்ந்தவர் பால முரளி கிருஷ்ணா.

இவர் வாங்கிய விருதுகள் கலை விலைக்குள் கட்டுப்படாதது. ஆனாலும் திமிர்ந்த ஞானம் என்பது அங்கீகாரங்களுக்குத் தலை வணங்குவதே பண்பாகும். டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் குரலும், ஞானமும், ஆய்வும், கண்டுபிடிப்புகளும் பல பட்டங்களைப் பெற்றுத் தந்தன. அவற்றில் சில பத்ம பூஷன், பத்ம விபூஷன், செவாலியே போன்றவையாகும். 2 முறை தேசிய விருதுகளும் வாங்கியுள்ளார்.

‘பக்த பிரகலாதன்’ படத்தில் நாரதராக நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. கவிக்குயில் படத்தில் இளையராஜா இசையில் இவர் பாடிய ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’  என்ற பாடல் அந்நாளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வகையில்  ‘திருவிளையாடல்’ படத்தில் ‘ஒரு நாள் போதுமா?’, ‘நூல்வேலி’  படத்தில் ‘மௌனத்தில் விளையாடும் மனசாட்சியும்’, ‘பசங்க’  படத்தில் ‘அன்பாலே அழகாகும் வீடு’ இன்னும் சில பாடல்கள் அடங்கும். சுமார் 400 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். உலகம் முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கச்சேரிகளை நடத்தியுள்ளார்.

பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவு இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

Similar News