தரவரிசை
குழந்தைகளை மிரட்டும் பேய் - தூநேரி விமர்சனம்
சுனில் டிக்ஸன் இயக்கத்தில் ஜான் விஜய், நிவின் கார்த்திக் நடிப்பில் வெளியாகி இருக்கும் தூநேரி படத்தின் விமர்சனம்.
மனைவி, மகள், மகனுடன் வாழும் இன்ஸ்பெக்டர் நிவின் கார்த்திக் சென்னையிலிருந்து காட்டுப் பகுதியில் உள்ள கிராமத்துக்கு டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார். போலீஸ் நிலையத்தில் சார்ஜ் எடுப்பதற்குமுன் நிவின் கார்த்திக் குடும்பத்தினரை தனி வீட்டில் குடியேற்றுகிறார்.
வீட்டுக்கு எதிரிலேயே சுடுகாடு இருப்பதால், குழந்தைகள் பயப்படுகின்றனர். அதே சமயம் ஊரில் அடிக்கடி கொலை சம்பவங்கள் நடக்கிறது. மேலும் நிவின் குடும்பித்தினரையும் அமானுஷ்ய சக்தி தொந்தரவு செய்கிறது. இறுதியில் ஊரில் இருப்பவர்களை கொலை செய்வது யார்? நிவின் கார்த்திக் குடும்பத்தினரை தொந்தரவு செய்யும் அமானுஷ்ய சக்தி எது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நிவின் கார்த்திக் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார். தன்னால் முடிந்தளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். கருப்பசாமியாக வரும் ஜான் விஜய் வழக்கமான நடிப்பில் இருந்து மாறி வித்தியாசமான நடிப்பை வழங்கி இருக்கிறார். தன்னை திட்டுபவர்களை அடிப்பதும், பாசத்தால் உருகுவதுமாக மனதை கவர்ந்திருக்கிறார்.
நிவின் மனைவியாக வரும் மியாஸ்ரீ, அன்பு, பயம், மிரட்டல் என நடிப்பில் வேற்றுமை காண்பித்து இருக்கிறார். குழந்தைகள் அஷ்மிதா, நகுல், அபிஜித், மூவரின் நடிப்பும் எதார்த்தமாக அமைந்திருக்கிறது.
வழக்கமான பேய் பட வரிசையில் இப்படம் அமைந்தாலும், வித்தியாசம் காண்பித்து இருக்கிறார் இயக்குனர் சுனில் டிக்ஸன். சொல்ல வந்த கதையை தெளிவாக சஸ்பென்ஸ் கலந்து சொல்லியிருக்கிறார். திகில் படத்திற்கு ஏற்றவாறு இசையமைத்து இருக்கிறார் இசையமைப்பாளர் கலையரசன். கலேஷ் மற்றும் அலன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘தூநேரி’ திகில்.