சினிமா
அறிமுக இயக்குனர் முருகன் இயக்கத்தில் யோகிபாபு, சாயாஜி ஷிண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் காக்டெய்ல் படத்தின் முன்னோட்டம்.
யோகிபாபு நாயகனாக நடித்துள்ள படம் `காக்டெய்ல்'. அறிமுக இயக்குனர் முருகன் இயக்கியுள்ளார். இதில் யோகிபாபுவுடன், சாயாஜி ஷிண்டே நகைச்சுவை கலந்த இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மனோபாலா, மைம்கோபி, சாமிநாதன், யோகி பாபுவின் நணபர்களாக ரமேஷ், மிதுன், டி.வி. புகழ் பாலா குரேஷி ஆகியோரும் நடித்துள்ளார்கள். `காக்டெயில்' என்ற பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்த `மதுரை வீரன்' படத்தின் இயக்குனரும், லிசா, டேனி ஆகிய படங்களின் தயாரிப்பாளருமான பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, இந்த படத்தை தயாரித்துள்ளார். `காக்டெயில்' படத்தை பற்றி அவர் கூறியதாவது: ``இந்திய சினிமாவில் முதல்முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. அந்த பறவையுடன் ஒரு முருகன் சிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது. யோகி பாபு, நாய்க்கு முடிவெட்டும் கடை நடத்துகிற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாசிடம் பணிபுரிந்த சாய் பாஸ்கர், இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகியிருக்கிறார். ரவீண் ஒளிப்பதிவு செய்துள்ளார். கதைப்படி, யோகி பாபுவும், அவருடைய நண்பர்களும் செய்யாத கொலை வழக்கு ஒன்றில் எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொள்கிறார்கள். கொலையானது யார், அந்த கொலையை செய்தது யார், அதில் இருந்து யோகி பாபுவும், நண்பர்களும் எப்படி வெளியே வருகிறார்கள்? அதில் பறவையின் பங்கு என்ன? என்பதே கதை.'' என கூறினார்.