சினிமா
பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் காடன் படத்தின் முன்னோட்டம்.
ஈரோஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘காடன்’. மனிதனுக்கும், யானைக்குமான ஆழமான உறவை உணர்வுப்பூர்வமாக, நெஞ்சம் நெகிழத்தக்க வகையில் எடுத்துரைக்கிறது. அதிலும் குறிப்பாக உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகியிருக்கிறது.
மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் இந்த திரைப்படத்தில், கதாநாயகனாக ராணா நடிக்க, அவருடன் இணைந்து விஷ்ணு விஷால் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்திருக்கிறார். இந்தியில் ‘ஹாத்தி மேரே சாத்தி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், புல்கிட் சாம்ராட் அவருடன் இணைந்து நடிக்கிறார். இந்த மூன்று திரைப்படங்களிலும் ஸ்ரியா பில்கோங்கர் மற்றும் சோயா உசேன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தில் இயற்கை எழிலின் மகத்துவத்தையும், போராட்டக் களத்தின் பரபரப்பையும் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார் அறிமுக ஒளிப்பதிவாளர் அசோக் குமார். இப்படத்தின் படத்தொகுப்புக்கு புவன் பொறுப்பேற்றிருக்கிறார். இதன் மூலம் அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகுக்கு ஒரே நேரத்தில் அறிமுகமாகிறார். ஸ்டண்ட்ஸ் சிவா, ஸ்டன்னர் சாம் இப்படத்தின் அதிரடி காட்சிகளுக்கு விறுவிறுப்பேற்றியிருக்கிறார்கள். இப்படத்திற்கு ஷாந்தனு மோய்த்ரா இசையமைத்திருக்கிறார்.