சினிமா
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பின்னணி பாடகி பி.சுசீலா சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தபோது எடுத்த படம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பின்னணி பாடகி பி.சுசீலா சாமி தரிசனம்

Published On 2016-06-13 08:40 IST   |   Update On 2016-06-13 08:40:00 IST
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரபல சினிமா பின்னணி பாடகி பி.சுசீலா நேற்று சாமி தரிசனம் செய்தார்.
பிரபல சினிமா பின்னணி பாடகி பி.சுசீலா. இவர் நேற்று காலை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். அவரை கோவில் பொது தீட்சிதர்கள் மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச்சென்றனர்.

பின்னர் அங்குள்ள சிற்சபையில் வீற்றிருக்கும் நடராஜர், சிவகாம சுந்தரியை பி.சுசீலா சாமிதரிசனம் செய்தார். அவருக்கு தீட்சிதர்கள் பிரசாதம் வழங்கினர். தொடர்ந்து கோவில் உள்பிரகாரத்தை வலம் வந்தார். சாமிதரிசனம் முடிந்த பின்னர் பி.சுசீலா அங்கிருந்து திருவாரூருக்கு புறப்பட்டு சென்றார்.

முன்னதாக பி.சுசீலா சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்திருப்பதை கேள்விப்பட்டு அவரை பார்ப்பதற்காக சிதம்பரம் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு வந்தனர். இதனால் பெரும் கூட்டம் கூடியது.

இதையடுத்து எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் இருப்பதற்காக கோவிலின் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Similar News