சினிமா செய்திகள்

சரண் ராஜ்

குடிபோதையில் கார் ஓட்டிய துணை நடிகர்.. பரிதாபமாக உயிரிழந்த வெற்றிமாறன் உதவி இயக்குனர்

Published On 2023-06-09 14:04 GMT   |   Update On 2023-06-09 14:04 GMT
  • வெற்றிமாறனிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்தவர் சரண்ராஜ்.
  • இவர் வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக ஒரு சில காட்சியில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை மதுரவாயல், தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது29). இவர் வெற்றிமாறனிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக ஒரு சில காட்சியில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் நேற்று இரவு 11.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று தறி கெட்டு ஓடி முன்னால் சென்ற மற்றொரு கார் மீது மோதியது. பின்னர் முன்னால் சென்ற சரண்ராஜின் மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக மோதியது. இதில் நிலை தடுமாறிய சரண்ராஜ் சாலையோரம் இருந்த மின்விளக்கு கம்பத்தின் மோதி தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


பழனியப்பன்

தகவல் அறிந்ததும் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலியான சரண்ராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தது சாலிகிராமம் பகுதியை சேர்ந்த துணை நடிகரான பழனியப்பன் (41) என்றும் அவர் மதுபோதையில் காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து துணை நடிகர் பழனியப்பனை போலீசார் கைது செய்தனர். கைதான பழனியப்பன், ரஜினி முருகன், சந்திரமுகி- 2 படத்தில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். குடிபோதையில் துணை நடிகர் ஓட்டிய கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News