சினிமா செய்திகள்

ரன்பீர் கபூர்

கங்குலி வாழ்க்கை கதையில் நான் நடிக்கிறேனா..? ரன்பீர் கபூர் விளக்கம்..

Published On 2023-02-28 08:33 GMT   |   Update On 2023-02-28 08:33 GMT
  • நடிகர் ரன்பீர் கபூர் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
  • இதைத்தொடர்ந்து ரன்பீர் கபூர் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி வாழ்க்கை படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். மேலும், இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


ரன்பீர் கபூர்

இதையடுத்து நடிகர் ரன்பீர் கபூர் கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் கங்குலியை, ரன்பீர் கபூர் சந்தித்து பேசியதை வைத்து இந்த செய்தியை உறுதிப்படுத்தி பல தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரன்பீர் கபூரிடம், கங்குலி வாழ்க்கை படம் குறித்து கேட்கப்பட்டது. இது குறித்து அவர் கூறியதாவது, "கங்குலி இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடும் லெஜண்ட். அவரை பற்றிய வாழ்க்கை படம் எடுக்கப்படுவது மிகவும் சிறப்பானது. ஆனால் துரதிருஷ்டவசமாக நான் இந்த படத்தில் இடம்பெறவில்லை. எனக்காக காதல் கதைகளை தான் இயக்குனர்கள் எழுதி வருகிறார்கள் என நினைக்கிறேன்'' என்று கூறினார்.

Tags:    

Similar News