சினிமா செய்திகள்

'டியூட்' படத்தில் 'கருத்த மச்சான்' பாடலை நீக்க ஐகோர்ட் உத்தரவு

Published On 2025-11-28 11:17 IST   |   Update On 2025-11-28 11:17:00 IST
  • 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாடல்கள் தற்போது ‘டிரெண்ட்' ஆகியுள்ளது.
  • முன்கூட்டியே வழக்கு தொடராமல், படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியான பின்னர் தொடர்வது ஏன்?'' என்று கேள்வி எழுப்பினார்.

நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்த 'டியூட்' திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த 'கருத்த மச்சான்', '100 வருஷம்' ஆகிய பாடல்கள் அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில், இந்த பாடல்கள் மீதான உரிமையை எக்கோ நிறுவனத்திடம் இருந்து சோனி நிறுவனம் பெற்றுள்ளது. சோனி நிறுவனத்திடம் இருந்து தாங்கள் அனுமதி பெற்றோம் என்று கூறப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளையராஜா தரப்பு வக்கீல், ''இந்த விவகாரத்தில் எக்கோ நிறுவனத்துக்கு எதிராக இந்த ஐகோர்ட் தடை விதித்துள்ளது'' என்று கூறினார். உடனே நீதிபதி, ''30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாடல்கள் தற்போது 'டிரெண்ட்' ஆகியுள்ளது. இதனால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு? அதுமட்டுமல்ல முன்கூட்டியே வழக்கு தொடராமல், படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியான பின்னர் தொடர்வது ஏன்?'' என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு இளையராஜா தரப்பு, ''படம் வெளியானதும் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அதுபோல யாரும் இல்லை என்று நோட்டீஸ் கடிதம் திரும்ப வந்துவிட்டது'' என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து இவ்வழக்கில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இளையராஜா பாடல்களின் புனிதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 'கருத்த மச்சான்' பாடலை நீக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதனிடையே, 'கருத்த மச்சான்' பாடலை 'டியூட்' படத்தில் இருந்து நீக்க 7 நாள் அவகாசம் தேவை என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையே நீதிபதி நிராகரித்தார்.

இசையமைப்பாளர் இளையராஜா மனுவுக்கு பதிலளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஜனவரி 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். 

Tags:    

Similar News