சினிமா
‘ஜகமே தந்திரம்’... ஒரு அற்புதமான திரையரங்க அனுபவமாக இருந்திருக்க வேண்டிய படம் - தனுஷ் வேதனை
'ஜகமே தந்திரம்' படம் தொடர்பாக எந்தவொரு டுவிட்டையும் வெளியிடாமலேயே இருந்த நடிகர் தனுஷ், தற்போது முதன்முறையாக அப்படம் குறித்து டுவிட் செய்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 18-ம் தேதி வெளியாக உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். இந்தப் படம் ஓடிடி வெளியீடு என்று முடிவானதிலிருந்தே தயாரிப்பாளர் சசிகாந்திற்கும், நடிகர் தனுஷுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து 'ஜகமே தந்திரம்' படம் தொடர்பாக எந்தவொரு டுவிட்டையும் தனுஷ் வெளியிடாமலேயே இருந்தார். இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள சூழலில், முதன்முறையாக 'ஜகமே தந்திரம்' குறித்து டுவிட் செய்துள்ளார் தனுஷ்.
நடிகர் தனுஷின் டுவிட்டர் பதிவு
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “ஒரு அற்புதமான திரையரங்க அனுபவமாக இருந்திருக்க வேண்டிய படம், நெட்பிளிக்ஸ் தளத்துக்கு வருகிறது. இருந்தாலும், நீங்கள் அனைவரும் 'ஜகமே தந்திரம்' மற்றும் சுருளியை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்”. இவ்வாறு தனுஷ் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.