சினிமா
விக்னேஷ் சிவன், நயன்தாரா

விக்னேஷ் சிவன் - நயன்தாராவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா? - வைரலாகும் புகைப்படம்

Published On 2021-03-26 02:05 GMT   |   Update On 2021-03-26 02:05 GMT
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும், 2015-ல் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் நெருக்கமாகி 6 வருடமாக காதலித்து வருகிறார்கள்
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் தமிழ் பட உலகில் பரபரப்பாக பேசப்படும் காதல் ஜோடியாக வலம் வருகிறார்கள். 2015-ல் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் நெருக்கமாகி 6 வருடமாக காதலித்து வருகிறார்கள். ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறார்கள். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ரசிகர்களும் வலைத்தளத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இந்த வருடத்தில் அவர்களது திருமணம் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த படத்தில் விக்னேஷ் சிவன் மார்பில் நயன்தாரா சாய்ந்து இருக்கிறார். நயன்தாராவின் கையில் பிளாட்டினம் மோதிரம் பளிச்சிடுகிறது. 



அந்த மோதிர புகைப்படத்தின் கீழ், “விரலோடு உயிர்கூட கோர்த்து'' என்ற பதிவையும் விக்‌னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை வைத்து நயன்தாரா கையில் அணிந்து இருப்பது நிச்சயதார்த்த மோதிரம் என்றும் விக்னேஷ் சிவனுக்கும் அவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. 

அந்த புகைப்படத்தின் கீழ் நிச்சயதார்த்தம் முடிந்த இருவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். ஆனாலும் நிச்சயதார்த்தம் நடந்ததா? என்பதை இருவரும் உறுதிப்படுத்தவில்லை. நயன்தாரா தற்போது ரஜினியுடன் அண்ணாத்த, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
Tags:    

Similar News