சினிமா
அதையே நினைத்து கவலை பட மாட்டேன் - அதிதி ராவ்
தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், சைக்கோ படங்களில் நடித்து பிரபலமான அதிதி ராவ் அதையே நினைத்து கவலைப்பட மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
தமிழில் கார்த்தி ஜோடியாக காற்று வெளியிடை படத்தில் நடித்து பிரபலமானவர் அதிதிராவ். செக்க சிவந்த வானம், சைக்கோ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
“சினிமா முழுவதும் நானே இருக்க வேண்டும் என்று ஆசை இல்லை. திரையில் சில நிமிடங்கள் வந்தாலும் பரவாயில்லை. ரசிகர்கள் தியேட்டரை விட்டு வீட்டுக்கு சென்ற பிறகும் அவர்கள் மனதை நெருடிக்கொண்டே இருக்க வேண்டும். நினைவிலும் நிற்க வேண்டும். சவாலான வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன்.
இந்த விஷயத்தில் ஹாலிவுட் நடிகைகள்தான் எனக்கு முன் உதாரணம். அவர்கள் எண்ணங்கள் அப்படித்தான் இருக்கும். தங்களுடைய வேலையை அவர்கள் செய்து கொண்டு போவார்களே தவிர மற்றவர்கள் விவாதங்கள், விமர்சனங்களை கண்டு கொள்ளமாட்டார்கள். நானும் அப்படித்தான். என்னை பற்றி யார் என்ன சொன்னாலும் அதற்காக வருத்தப்படவோ அதை மனதில் வைத்துக்கொள்ளவோ அதையே நினைத்து கவலைப்படவோ மாட்டேன்.'' இவ்வாறு அதிதிராவ் கூறினார்.