சினிமா
பிரபல விளையாட்டு வீரரின் பயோபிக்கில் தனுஷ்?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், பிரபல விளையாட்டு வீரரின் பயோபிக்கில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை குறித்து சினிமா எடுப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி மில்கா சிங், மேரி கோம், தோனி குறித்து வெளியான படங்கள் வசூலில் சாதனை படைத்தன. சச்சின் படமும் வெளியானது. தற்போது கபில் தேவ் (கிரிக்கெட்), பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவல், பிவி சிந்து, கிரிக்கெட் வீராங்கனைகள் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி ஆகியோரது வாழ்க்கை கதைகளும் படமாக தயாராகி வருகின்றன.
அந்தவகையில், இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கைக் கதையை படமாக எடுக்க உள்ளனர். இந்த பயோபிக்கை பிரபல பாலிவுட் இயக்குனரான ஆனந்த் எல் ராய் இயக்க உள்ளார். இவர், தனுஷ் இந்தியில் அறிமுகமான ராஞ்சனா படத்தை இயக்கிவர். தற்போது தனுஷ், அக்ஷய் குமார் நடிக்கும் அத்ரங்கி ரே படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து அவர் விஸ்வநாதன் ஆனந்தின் பயோபிக்கை இயக்குவார் எனத் தெரிகிறது. இந்நிலையில், இதில் விஸ்வநாதன் ஆனந்த் கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது.