சினிமா
விஷால்

ஆட்டோ ஓட்டுநரை நெகிழ வைத்த விஷால்

Published On 2020-12-09 13:56 GMT   |   Update On 2020-12-09 13:56 GMT
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை நெகிழ வைத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் நடிப்பில் தற்போது எனிமி திரைப்படம் உருவாகி வருகிறது. ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தில் விஷாலுடன் ஆர்யா நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷால் ஆட்டோ ஓட்டுனரை நெகிழ வைத்திருக்கிறார்.

 புதுச்சேரி ஆட்டோ ஓட்டுநரான முத்து சரவணன் என்பவர் தனது முகநூலில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதில், "நடிகர் விஷால் என் ஆட்டோவில் பயணித்தார். புதுச்சேரி கடற்கரை சாலை பழைய நீதிமன்ற வளாகம் அருகாமையில் நேற்றிரவு 11 மணி அளவில் வேகமாக ஓடிவந்து என் ஆட்டோவில் ஏறினார். நான் திரும்பிப் பார்க்கும் முன்னரே ஆட்டோவை எடுங்கள் எடுங்கள் என்று என்னை அவசரமாக தட்டினார். ஒரு நொடி எதுவும் புரியாமல் பதறிப்போனேன். சிறிது தூரம் சென்றவுடன் நான் சிறிய குழப்பமான மன நிலையில் திரும்பிப் பார்த்து நீங்கள் நடிகர் விஷால்தானே என்று சந்தேகத்துடன் கேட்டேன். அதற்கு அவர் இயல்பாக ஆமாம்” என்றார்.



அதன் பிறகு என்னிடம் பேசிய விஷால், “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் உங்கள் ஆட்டோவுக்கு சவாரி எல்லாம் எப்படி கிடைக்கிறது என்ற படியே மிகவும் இலகுவாக பேச ஆரம்பித்தார். ராஜீவ் காந்தி சதுக்கம் அருகாமையில் இருக்கும் ஹோட்டல் அக்கார்ட் வரைக்கும் இருவரும் பேசிக்கொண்டே சென்றோம். அது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. 

அந்த சிறிய நேரம் பெரிய சந்தோஷமாக இருந்தது. அவர் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து என்னிடம் அப்படியே கொடுத்தார் . புகைப்படம் எல்லாம் எடுத்து முடிந்த பிறகு ஹோட்டல் வெளியே வந்து எண்ணிப் பார்க்கையில் 370 ரூபாய் இருந்தது. சகோ தேங்க்ஸ் விஷால்" என்று அந்த ஆட்டோ ஓட்டுநர் புகைப்படத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News